Header Ads



"ஒரு சமூகத்துக்கு உயர்அங்கீகாரமும், ஏனைய சமூகங்களுக்கு இரண்டாம்பட்ச அங்கீகாரமும் வழங்ககூடாது"

இனவாத கோணத்தில் அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ள ஜே.வி.பி, சகல இன மக்களுக்கும் சமமான அங்கீகாரம் வழங்கும் வகையிலான அரசியலமைப்பின் ஊடாகவே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவித்தது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்ற பிரதான நோக்கத்தின் ஊடாகவே நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும். பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்றுவதாயின் அது அரசியலமைப்பின் ஊடாக மாத்திரமே முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை பேணுவது மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்துவது என்ற இரண்டு விடயங்களும் ஒரே பாதையில் கொண்டுசெல்லக் கூடிய விடயங்கள் அல்ல. நிறைவேற்று ஜனாதிபதி முறையை பலப்படுத்துவது என்பது ஜனநாயகத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் செயற்பாடாகும் என அவர் விமர்சித்தார்.

நேற்றையதினம் கூடிய அரசியலமைப்பு சபையில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அநுரகுமார திசாநாயக்க இந்த விமர்சனங்களை முன்வைத்தார்.

அரசியலமைப்பு தயாரி்க்கும் செயற்பாடுகளில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே கலந்துகொண்டுள்ளோம். இவ்வாறான நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் விடயம் கோட்பாடாக கொள்ளப்பட வேண்டும். அதனைவிடுத்து கலந்துரையாடல்கள் மூலம் சரிசெய்யலாம் என்ற நிலைப்பாடு இருக்கக் கூடாது என்றார்.

மாகாணசபைத் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாயின் அது அரசியலமைப்பின் ஊடாகவே கொண்டுவரப்பட வேண்டும். அரசியலமைப்புக்கு வெளியே கொண்டுவரப்படும் எந்தவொரு பாராளுமன்ற திருத்த யோசனைகளுக்கும் ஜே.வி.பி ஆதரவு வழங்கப்போவதில்லையெனக் கூறினார்.

இலங்கை பல் இன சமூகத்தைக் கொண்ட நாடாகும். எனவே சகல இன, மத மக்களும் சமமான முறையில் அங்கீகரிக்கப்பட வேண்டும். இதனைவிடுத்து ஒரு சமூகத்துக்கு உயர்ந்த அங்கீகராமும், ஏனைய சமூகங்களுக்கு அல்லது இனங்களுக்கு இரண்டாம் பட்ச அங்கீகாரமும் வழங்கப்படக்கூடாது. சகல மக்களின் இன, மொழி, கலாசார உரிமைகள் மதிக்கப்படும் வகையிலான அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் ஜே.வி.பியின் தலைவர் மேலும் கூறினார்.

இறைமை, தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் உரிமைகள் என்பன அரசியலமைப்பின் முக்கிய காரணங்களாக இருக்க வேண்டும். அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகள் இனவாத கோணத்தில் நோக்கப்படக்கூடாது.

இனவாத கண்ணோட்டத்தினூடாக அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளில் எவரும் பங்கெடுக்கக் கூடாது என்பதுடன், அவ்வாறான எவரும் கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார்.

No comments

Powered by Blogger.