Header Ads



இந்த நல்லாட்சி, உருப்படியாக என்ன செய்துள்ளது...?

இரு கட்சிகள் இணைந்து இணக்கப்பாட்டு அரசியலின் அடிப்படையில் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளதன் மூலம் நன்மைகளை விட தீமைகளே அதிகம் இலங்கை நாடு பெற்றுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரவித்தார்.

யார் என்ன சொன்னாலும் இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் இரண்டரை வருடங்களும் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளதென ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனா vision 2025 என்ற கொள்கையை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கூறியது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினா எழுப்பிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

தற்போது இலங்கையின் இரு பெரும் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளன. இதன் ஆரம்பத்தில் எதுவித தடைக்களுமின்றி அரசை கொண்டு செல்வார்கள் என நம்பப்பட்டது. இருந்த போதிலும் தற்போதைய அரசுக்கு இரு பெரும் கட்சிகளுக்கிடையில் தோன்றும் முரண்பாடுகளை களையவே நேரம் சரியாகவுள்ளது. மக்கள் இரு கட்சிகள் இணைந்த இணக்கப்பாட்டு அரசியல் மூலம் நன்மை கிட்டும் என நம்பிய போதும் அவர்களுக்கு அது சாபமாகவே உள்ளது. 

இதனை தெளிவாக விளங்க அரசியலமைப்பில் அமைச்சர்களின் எண்ணிகையை மட்டுப்படுத்திய விடயம் போதுமாகும். அமைச்சர்களின் எண்ணிகையை மட்டுப்படுத்தியதன் மூலம் செலவுகளை குறைத்தல், அமைச்சர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் போன்ற பல நல்ல விடயங்கள் உள்ளடங்கியுள்ளமை மறுக்க முடியாத உண்மை. அரசியலமைப்பில் அமைச்சர்களின் எண்ணிகையை மட்டுப்படுத்திய இவ்வரசு தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகிரித்து, தான் கொண்டு வந்த மாற்றம் தனக்கில்லை, மற்றவர்களுக்கே என பறை சாட்டிச் சென்றுள்ளது. இதுவெல்லாம் தேசிய அரசாங்கம் என்றதன் மூலம் கிடைக்கப்பெற்ற தீமைகள்.

இந்த நல்லாட்சி அரசானது தங்களது ஆட்சிக் காலத்தின் அரைப்பங்கை நிறைவு செய்துவிட்டது. உருப்படியாக என்ன செய்துள்ளார்கள் என ஒன்றையாவது இவர்களால் கோடிட்டுக் காட்ட முடியுமா? மக்கள் ஆணை தந்த காலத்துக்குள் உருப்படியாக எதனையும் செய்ய இயலாதவர்கள் அடுத்த ஆட்சிக் காலத்தையும் எங்களிடம் தாருங்கள் என  vision 2025 என்ற திட்டத்தின் மூலம் கோரியுள்ளனர். உங்கள் திட்டங்களை இந்த ஆட்சிக் காலத்துக்குள் மட்டிடுவது பொருத்தமானது. அதனை சரி வர செய்தால் மக்கள் தானாகவே ஆட்சியை தூக்கி கையில் தருவார்கள்.

அடுத்த ஆட்சியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அணியினர் கைப்பற்றக் கூடிய சாதகமான நிலமை உள்ளது. இந்த அரசானது தேர்தலை கண்டு பேயைக் கண்டு விரண்டோடுவது போல் அஞ்சுவதே இதற்கான பெரும் சான்றாகும். இல்லை.. இன்னுமொரு கட்சி கைப்பற்றுகிறது என வைத்துக்கொள்வோம்.அவர்கள் உங்கள் திட்டங்களை தொடர்வதை விரும்பவில்லை. அப்போது நீங்கள் செய்த திட்டத்தை இடை நடுவில் கைவிட்டால் என்னவாகும். உங்கள் ஆட்சிக் காலத்தில் முன்னெடுத்த அத்தனையும் வீணாய் போய்விடுமே என அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.