அரசியல் யாப்பு இடைக்கால அறிக்கை, முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் இல்லை
அரசியல் யாப்பு வழிநடாத்தல் சபையின் இடைக்கால அறிக்கை என்பது தமிழ் மக்களுக்கு ஓரளவு வெற்றியாகவும் முஸ்லிம்களுக்கும், சிங்களவருக்கும் எந்த நன்மையையும் அளிக்காமல் பாரிய பாதகங்களை ஏற்படுத்துவதாகவுமே அனைந்துள்ளது என்பதே முஸ்லிம் உலமா கட்சியின் நிலைப்பாடாகும் என அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கல்முனையில் உள்ள கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர் சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இடைக்கால அறிக்கையில் வடக்கும் கிழக்கும் ஒரே அலகாக கருதப்படும் என்று எழுதப்பட்டுள்ளதானது கிழக்கு முஸ்லிம்களை தமிழர் ஆதிக்கத்துக்கு அடிமைப்படுத்தும் கருத்தாகும். இதனை எந்த வகையிலும் உலமா கட்சி ஏற்றுக்கொள்ளாது. அதுவும் சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் அதிகார பரவலாக்கல் செய்ய வேண்டும் என்பதில் ஒத்த கருத்துள்ள நிலையில் மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரமும் வழங்கப்பட்டு வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் அது நிச்சயம் முஸ்லிம்களுக்கு பாரிய பாதகங்களை ஏற்படுத்தும் என்பதுடன் எதிர் காலத்தில் தமிழ், முஸ்லிம் மோதல்களை ஏற்படுத்தும். அப்போது 85களில் ஐக்கிய தேசியக்கட்சி செய்தது போன்று முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் ஆயுதத்தை கொடுத்து இரு இனங்களையும் மோத விட்டது போன்ற மோதலை சிங்கள பேரினவாத அரசுகள் ஏற்படுத்தலாம்.
கிழக்கில் மட்டுமல்லாது கிழக்குக்கு வெளியே குறிப்பாக வடக்கு, மேல் மாகாணம் போன்ற மாகாணங்களில் மிகச்சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கும் இது மிகபெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இதன் கரணமாகவே 2010 முதல் அரசியல் அமைப்பு சபைக்கு உலமா கட்சியால் வழங்கப்பட்டு வரும் ஆலோசனைகளில் ஒன்றாக மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்குவதாயின் கிழக்குக்கு வெளியில் வாழும் முஸ்லிம்களின் பெரும்பான்மை பிரதேசங்களை இணைத்து தனி நிர்வாக சபைகளை ஏற்படுத்த வேண்டும் என கூறி வருகிறோம். அவ்வாறு முடியாது என்றால் தற்போதிருக்கும் இனவாத சூழலில் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்க கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
இலங்கை வரலாற்றை பார்க்கும் போது பொலிசார் பெரும்பாலும் இனவாதமாகவே செயற்பட்டு வந்துள்ளதை காண்கிறோம். அதே போல் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு தமிழ் பொலிஸ் உருவாக்கப்பட்ட போது முஸ்லிம்கள் மீது மேகொள்ளப்பட்ட அடாவடித்தனங்களை நாம் எளிதில் மறந்து விட முடியாது.
வரலாற்றின் கசப்பான நிகழ்வுகள் பாடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு எடுக்கப்படும் தீர்வுகளே நிரந்தர அமைதியை தரும்.
அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இருக்க வேண்டும் என்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாட்டை நாம் வரவேற்கிறோம். அதுவே எமதும் நிலைப்பாடாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்தார்.
Post a Comment