இலங்கையர் என்ற சிந்தனையை ஏற்படுத்தவே, ஸாஹிரா கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது - பிரதமர் ரணில்
ஜனநாயகத்தை பாதுகாத்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இது எமக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பமாகும். இதனை பயன்படுத்திக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும். அத்துடன் அனைவரும் இலங்கையர் என்ற சிந்தனையை ஏற்படுத்தவே ஸாஹிரா கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
எமக்கு சுதந்திரம் கிடைத்த காலத்தில் இனப்பிரச்சினையோ மதப்பிரச்சினையோ இருக்கவில்லை. அனைத்து இன மக்களும் இலங்கை மக்களாகவே இருந்துவந்தனர். இந்த ஒற்றுமையை பாதுகாப்பதற்காகவே 1948ஆம் ஆண்டு டி.எஸ்.சேனாநாயக்க தேசிய கீதத்தில் அனைவரும் ஒருதாயின் பிள்ளைகள் என்பதை உறுதிப்படுத்தினார். அதன் மூலம் நாட்டுமக்கள் அனைவரும் எந்த இனத்தவராக இருந்தாலும் இலங்கையர் என்ற கொள்கையில் செல்லவேண்டும் என்று ஆசைப்பாட்டார்.
அத்துடன் எமது அண்டைய நாடான இந்தியா பிரித்தானியரிடமிருந்து சுதந்திரமடைந்தபோது பாகிஸ்தான் பிரிந்து சென்றது. என்றாலும் இந்தியாவில் முஸ்லிம்கள், தமிழர்கள், பேகர் மற்றும் பெளத்தர்கள் என பல இனத்தவர்கள் இருந்தனர். இவர்கள் யாரும் தங்களை இந்தியர் என்று சொல்லிக்கொள்ளவில்லை. அதனால் இந்தியா பல பிரிவுகளாக பிரிந்து விடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் இருந்து வந்தது. அத்துடன் இந்தியாவின் பிரிவு இலங்கைக்கும் தாக்கம் செலுத்தலாம் என டி.எஸ். சேனாநாயக்க அச்சமடைந்தார்.
அதனால் இந்த அச்சத்தை போக்க எமது நாட்டவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்ற சிந்தனையை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தார். அதனையே இந்தியாவின் ஜவகர்லால் நேருவும் ஆரம்பித்தார். இன்று 70வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்தியாவுக்கு யார் சென்று கேட்டாலும் அவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் இந்தியர் என்றே கூறுவார்கள். இந்திய பிரதமர் நேரு உருவாக்கிய அந்த கோட்பாட்டை அவருக்கு பின்னால் வந்த அனைத்து பிரதமர்களும் கடைப்பிடித்துவந்தனர்.
அத்துடன் இந்திய அரசியல்வாதிகள் அந்த மக்களை இந்தியர் என்ற கொள்கையை கொண்டுசென்றார்கள் ஆனால் எமது நாட்டில் சகல இன தலைவர்களும் அரசியலில் இருந்தபோதும் இனப்பிரச்சினை மதப்பிரச்சினை, மொழிப்பிரச்சினையை ஏற்படுத்தினார்கள். அதனால் நாங்கள் 30 வருடங்கள் யுத்தம் ஒன்றுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் எமது எதிர்காலம் இல்லாமலாக்கப்பட்டது. 77ஆம் ஆண்டு எம்மைவிட பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த நாடுகள் இன்று எம்மை பின்தள்ளிவிட்டு சென்றுள்ளன.
அதனால்தான் நாட்டின் தேசிய ஐக்கியத்தை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம். நாட்டு மக்கள் அனைவரும் இலங்கையர் என்று சொல்லும் நிலையை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் கொண்டு செல்கின்றது. அரசாங்கத்தில் சகல இனத்தவர்களும் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் தங்கள் உரிமையை பாதுகாத்துக்கொண்டு இலங்கையராக இருப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஒரு முஸ்லிம், ஒரு இந்து தங்கள் மதத்தை பின்பற்றி ஏனைய மதங்களையும் மதித்து சிறந்த முஸ்லிமாக, இந்துவாக வாழ்வதில் என்ன பிரச்சினை இருக்கின்றது.
என்றாலும் சிலர் இனப்பிரச்சினையை தொடர்ந்து முன்னெடுக்கவே விரும்புகின்றனர். அதேபோன்று சில ஊடகங்களும் ஒரு மதத்தை, இனத்தை மாத்திரம் தெரிவுசெய்து அவர்களது விற்பனையை அதிகரித்துக்கொள்கின்றன. அத்துடன் வியாபாரபோட்டியையும் இனவாதம் அல்லது மதவாதத்தை ஏற்படுத்தி சிலர் மேற்கொள்கின்றனர்.ஒரு சிலர் இதிலிருந்து மீள முடியாமல் இருக்கின்றனர்.
மேலும் இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக தமிழர் ஒருவர் இருக்கின்றார். அவருடன் பல கட்சிகள் இணைந்து செயற்படுகின்றன. அதனால் நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இது எமக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பமாகும். இந்த பொறுப்பு எனக்கும் ஜனாதிபதிக்கும் மாத்திரம் உரியதல்ல. அனைவருக்கும் உரித்தானதாகும். அத்துடன் இன்று மக்களும் இனப்பிரச்சினையில் இருந்து விடுபட்டு இருக்கின்றனர். எனவே இந்த சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு நாட்டை பொருளாதார ரீதியில் உறுதிப்படுத்திக்கொள்ளவும் நாட்டு மக்கள் அனைவரும் இலங்கையர் என்று வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்தவும் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும் என்றார்.
Post a Comment