Header Ads



ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பம் - சிறிலங்காவை குறைகண்ட ஹுசேன்

காணாமல்போனோர் பணியகத்தை சிறிலங்கா உடனடியாக செயற்படுத்த வேண்டும் என்றும், ஏனைய நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடர் இன்று -11- ஜெனிவாவில் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“காணாமல்போனோர் பணியகத்தை சிறிலங்கா உடனடியாக செயற்படுத்த வேண்டும். அத்துடன், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவித்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்நீண்டகாலமாக இழுபறிப்படும் வழக்குகளுக்கு தீர்வுகாணல் உள்ளிட்ட , ஏனைய நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அனைத்துலக மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்ப புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

வடக்கில் பாதிக்கப்பட்டவர்கள் நடத்தும் எதிர்ப்புப் போராட்டங்கள், மெதுவாக நடக்கும் சீர்திருத்தங்கள் அவர்களின்  ஏமாற்றத்தை அதிகரிக்கச் செய்து வருவதை சுட்டிக்காட்டுகின்றன.

30/1 தீர்மானத்தின் போது அளித்த வாக்குறுதிக்கு அமைய,  நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதற்காக செயற்படுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை ஊக்குவிக்கிறேன்.

அத்துடன்,  இதனையும் ஏனைய வாக்குறுதிகளையும் நடைமுறைப்படுத்த தெளிவான காலஎல்லை ஒன்றை வகுக்க வேண்டும்.

இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றுவதை, பேரவையைச் சமாதானப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக அரசாங்கம் கருதக் கூடாது. அதன் எல்லா மக்களுக்கும் உரிமைகளை வழங்குவதற்கான ஒரு அவசியமான கடமை இதுவாகும்.

அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய நம்பகமான நடவடிக்கைகளை சிறிலங்கா எடுக்காதது, உலகளாவிய சட்ட நடவடிக்கைகளுக்கு இன்னும் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.