பூஜித் ஜயசுந்தர, எதனை 'புடுங்க' போகிறார்...?
-Azeez Nizardeen-
டேன் பிரியசாத் என்ற இனவாதிக்கு எதிராக நான் 14.08.2017 பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து இன்று கொழும்பு 12லுள்ள திட்டமிடப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவு (Organized Crime Preventive Division) என்னை வாக்குமூலம் ஒன்றைப் பெற வேண்டுமென்று அழைத்திருந்தது.
காலை 10.00 மணி முதல் 2.30 வரை சுமார் நான்கு மணித்தியாலங்கள் எனது வாக்குமூலம் மேற்படி பிரிவினால் பதிவு செய்யப்பட்டது.
இது தவிர டேன் பிரியசாத் போன்ற இனவாதிகளோடு கைகோர்த்து செயற்பட்டு வரும் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்திலும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிலும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளோம்.
மஹிந்தவின் ஆட்சி போன்றே நல்லாட்சியும் இனவாதத்திற்கு அடிபணிந்து செயற்படுவது வெளிப்படையாகவே தெரிகிறது.
இனவாதம் என்று வரும்போது கட்சியின் நிறங்கள், கொடிகள் எல்லாம் காணாமல் போய்விடுகின்றன. எங்கள் உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராட வேண்டிய நிலைக்கே நாம் தள்ளப்பட்டு வருகிறோம்.
கண்டிப் பகுதியிலுள்ள இளைஞன் ஒருவன் புத்தரை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டிற்காக 88 தினங்கள் சிறையிலடைக்கப்பட்டான். ஆனால் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக ஆச்சர்யம் தரும் வகையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பொலிஸார் இனங்களைப் பொறுத்து சட்டங்களை பயன்படுத்தி தேவைக்கேற்றவாறு மாற்றி வழக்குகளை வடிவமைக்கின்றனர்.
இதேவேளை பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர இனவாதத்தை முளையிலேயே கிள்ளியெறியப் போவதாக அறிவித்திருப்பதாக பத்திரிகை ஒன்றில் படித்தேன்.
இவர் எதனைக் 'கிள்ளி' எப்படி எப்போது 'புடுங்க'ப்போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இந்த இனவாதிகளின் பிரச்சினைகள் விடயத்தில் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களின் உழைப்பும் முயற்சியும் எமக்கு உந்து சக்தியாக இருக்கிறது என்பதை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
அல்லாஹ்வின் உதவியுடன் யார் உதவியும் நிகர் இல்லை
ReplyDeleteWE need many more Shiraz Noordeens.
ReplyDelete