கத்தியுடன் என்னை, கொலைசெய்ய வருபவன் பைத்தியகாரன் - மஹிந்த
தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு, இந்த அரசாங்கத்தினால், குறைக்கப்பட்டுள்ளதால், தனது உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக”, முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தன்னுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குள், கத்தியுடன் ஒருவர் நுழைவதற்கு முயன்றுள்ளார். அந்த விவகாரம் தொடர்பில், கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
”தாய் நாட்டை மீட்டெடுத்த எனக்கு, இந்த அரசாங்கத்தினால், அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன. என்னுடைய பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“எவ்வாறாயினும், கத்தியை எடுத்துக்கொண்டு என்னை கொலை செய்ய எவரேனும் வருவாரேயானால் அவர் பைத்தியகாரனாக இருப்பார்” என்றார்.
இதேவேளை, கொழும்பு-07, விஜயராம மாவத்தையில் உள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குள், இடுப்பில் கத்தியை மறைத்துவைத்துக்குகொண்டு, வியாழக்கிழமை இரவு 7 மணியளவில், ஒருவர் நுழைவதற்கு முற்பட்டுள்ளார்.
எனினும், வீட்டிலிருந்த பாதுகாப்பு பிரிவினரே, அந்த நபரை பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடுமையான பாதுகாப்புடன் கூடிய அந்த பிரதேசத்துக்குள் சந்தேகநபர் நுழைந்தமை, சந்தேகத்துக்கிடமாக உள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவருடைய நோக்கம் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை பொலிஸார், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், வௌ்ளிக்கிழமை ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment