தமிழ் மக்கள் மீதிருந்த கோபம், முஸ்லிம்கள் மீது திரும்பியுள்ளது - ஜெயபாலன்
சிங்களத்தில்: ரேகா நிலுக் ஷி ஹேரத்
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்.
வ.ஐ.ச. ஜெயபாலன் சர்வதேச தமிழ் சமூகத்தினரால் நன்கு மதிக்கப்படுபவர். கவிஞர், நாவலாசிரியர், அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் ஆலோசகர் என்றெல்லாம் அறியப்பட்டவர். அண்மையில் சினிமா நட்சத்திரமாகவும் தம்மை அடையாளப்படுத்தியுள்ளார். சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இவர் ஓர் இலங்கையர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ் குடா நாட்டின் உடுவில் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க கௌரவ தலைவராகவும் விளங்கியுள்ளார். இலங்கையில் யுத்த சூழ்நிலையின் போது, புலம் பெயர்ந்து, நோர்வே நாட்டின் பிரஜாவுரிமைப் பெற்று அங்கும் இந்தியாவிலுமாக வாழ்ந்து வருகிறார். சிங்கள மக்கள் இவரை ஒரு தேசியவாதியாகக் கருதி வருகின்றனர். தமிழ் பகுதிகளில் சிறுபான்மையினராக வாழும் சிங்கள, முஸ்லிம்களுக்கெதிராக அன்று புலிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டித்து இவர் குரல் கொடுத்தமையாலே சிங்கள மக்களின் அபிமானத்திற்குரியவராக விளங்குகிறார்.
இவருடன் ராவய வார இதழ் மேற்கொண்ட நேர்காணலின் தமிழாக்கத்தின் சில பகுதிகள் இங்கு தரப்படுகிறது.
கே:முஸ்லிம்கள் மீதான எதிர்ப்பு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நான் முஸ்லிம் சமூகம் சார்பாக பேசிவருவது குறித்து முஸ்லிம் சகோதரர்கள் நன்கறிவார்கள். வட புலத்திலிருந்து அன்று முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு பிரபாகரன் தீர்மானம் எடுத்தபோது, அதற்கு நான் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தேன். நான் முஸ்லிம் மக்களுக்காக கவிதைகள் கூட வடித்திருக்கிறேன். இதேநேரம் நான் சிங்கள மக்களிடம் முஸ்லிம்கள் உங்களுடன் ஒன்றுபட்டு செயலாற்றியதொரு சமூகமல்லவா? என்று கேட்க விரும்புகிறேன். வரலாற்று நெடுகிலும் இடம்பெற்ற இனப்பூசல்களின் போது, முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் தான் இருந்தார்கள். அதனால் சிங்களவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவதற்கு எந்த வகையிலும் நியாயமில்லை. எனவே எந்தப் பிரச்சினையானாலும் சரி சிங்களவர்கள் முஸ்லிம்களுடன் பேசித் தீர்த்துக் கொள்வதே சரியான வழியாகும்.
கே: சிங்களத் தலைவர்கள் இப்போது செய்ய வேண்டியதென்ன?
இன்றுள்ள பரம்பரையில் தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்களுக்குள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய இறுதியான ஒரே சந்தர்ப்பம் புதிய அரசியல் யாப்பேயாகும். அரசியல் மறுசீரமைப்பொன்று உருவாக்கம் பெறும் பட்சத்தில் தமிழ் புலம் பெயர்ந்த சமூகமும், சர்வதேச தமிழ் மக்களும் இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய அர்ப்பணிப்புச் செய்வார்கள். சென்னை இலங்கைக்கு பரந்தளவிலான சந்தை வசதியொன்றை உருவாக்கிக் கொடுக்கும். அப்போதுதான் நாம் யுத்தத்தை வென்றெடுத்தோம் என்று சிங்கள மக்களால் மார்பு தட்டிக்கொள்ள முடியும். இந்தப் பொருளாதார விருத்தி உண்மையிலேயே சமாதான காலத்தில் முன்னெடுக்கப்பட்டதொன்றாகும். இலங்கையின் ஏராளமான உற்பத்திப் பொருட்கள் சர்வதேசமெங்கும் சந்தைப்படுத்தப்பட்டன.
டெல்மா தேயிலை உட்பட பெயர்போன வர்த்தக நுகர்வுப் பொருட்கள் பெருமளவில் வெளிநாடுகளில் விற்பனையான காலமும் அதுவே. யுத்தம் மோசமான கட்டத்தையடைந்தபோது, தமிழ் செயற்பாட்டாளர்கள் சர்வதேச சந்தையில் இலங்கையின் உற்பத்திகளைப் பகிஷ்கரித்தனர். கடைகளில் இலங்கையின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்வதையும் தடுத்தனர். ஒரு சில கடைகளில் காணப்பட்ட இலங்கைப் பொருட்களை அழித்து நாசம் செய்தனர்.
அடுத்து சிங்களவர்களின் தேசாபிமானத்தை நான் வரவேற்கிறேன். அவ்வாறு நடந்து கொள்வதில் தவறில்லை. அடுத்து பெரும்பான்மையினர் என்ற வகையில் சிங்களவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும். அதற்கவர்கள் செய்ய வேண்டியதென்ன? உலகமயமாக்கலை வெற்றி கொள்வதிலேயே உண்மையான வெற்றி தங்கியிருக்கிறது. இப்போது அவர்களின் இனப்பற்றிலே பிரச்சினையொன்றிருக்கிறது. அவர்கள் உலகமயமாக்கலைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முந்திக்கொண்டு போகும் ஓர் இனமாக மாறக்கூடாது. அத்துடன் தமது யுத்த வெற்றியில் சிறைக் கைதிகளாக சிங்களவர்கள் ஆளாவதும் நல்லதல்ல. எமது சந்ததிகளான தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சமஷ்டி முறையொன்று குறித்து கலந்துரையாடுவதற்குத் தயாராகவுள்ளனர். தவறும் பட்சத்தில் அடுத்துவரக்கூடிய சந்தயினர் சர்வதேச சமூகத்துடனோ அல்லது இந்தியாவுடனோ இணைந்து சமஷ்டி முறையொன்றை ஏற்படுத்தும் கலந்துரையாடலுக்கு தயாராவது தவிர்க்க முடியாது போகும்.
நன்றி: ராவய
Post a Comment