ரோஹின்யர்களுக்கு கைகொடுக்கத் தயார் - பாராளுமன்றத்தில் இலங்கை அரசு அறிவிப்பு
மியன்மார் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழலை அடுத்து தேவை ஏற்படும் பட்சத்தில் ரோஹிங்யா அகதிகள் விடயத்தில் கரிசனையின்றி செயற்படாமல் அவர்களுக்கு இலங்கை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன சபையில் தெரிவித்தார்.
பெளத்த நாடு என்ற அடிப்படையில் நாம் கவலை கொள்கின்றோம். மியன்மாரில் சமாதானம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறு நாம் மியன்மார் அரசிடம் கோருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை --21-- மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அநீதி தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வலியுறுத்தி நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக சல்மான் எம்.பி. கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் உரையாற்றுகை யில்,
மியன்மார் நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற சூழல் காரணமாக பல இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். இவ்வாறு தஞ்சம் புகுந்துள்ள அகதிகள் சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளனர்.
இது தொடர்பில் நாம் பூரண அவதானம் செலுத்தியுள்ளோம். இலங்கைக்கும் மியன்மாருக்கும் பெளத்த நாடு என்ற வகையில் நீண்டகால நட்புறவு உள்ளது. பெளத்த சாசன அடிப்படையிலான நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளும் புரிந்துணர்வு அடிப்படையில் செயற்பட்டு வருகின்றோம்.
எனவே தற்போது பாதிக்கப்பட்ட அகதிகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். இதன்படி 1951 பிரகடனத்தின் பிரகாரம் அகதிகள் விடயத்தில் நாம் அக்கறை செலுத்தவுள்ளோம். மியன்மார் விவகாரம் தொடர்பில் சர்வதேச அளவில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
எனவே இந்த நிலைமை பெளத்த நாடு என்ற அடிப்படையில் நாம் கவலை கொள்கின்றோம். மியன்மார் நாட்டில் இடம்பெற்ற அமைதியற்ற சூழல் காரணமாக அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்படி தேவை ஏற்படும் பட்சத்தில் நாம் கரிசனையின்றி செயற்படாது, ரோஹிங்யா அகதிகளுக்கு இலங்கை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் ஒத்துழைப்புகளை வழங்கும்.
எனவே மியன்மாரில் சமாதானம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறு நாம் மியன்மார் அரசிடம் கோருகின்றோம் என்றார்.
Post a Comment