Header Ads



ரோஹிங்யர்களை வெளியேற்ற இனவாதிகள் முயற்சிசெய்தமை சட்டத்தை மீறிய பாரிய குற்றச்செயலாகும் - ஹிஸ்புல்லாஹ்

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் மேற்பார்வையில் கல்கிசையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளை அங்கிருந்து வெளியேற்ற சிங்கள தேசியவாதிகள் மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் அதன் பின்னர் அங்கு ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவை தொடர்பு கொண்டு விளக்கிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், சட்டம் ஒழுங்கை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். 

அமைச்சர் சாகல ரத்னாயக்கவை இன்று செவ்வாய்க்கிழமை மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கல்கிசை பகுதியில் இனவாதிகள் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் கவலைத் தெரிவித்ததுடன், சட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்துமாறும் வலியுறுத்தினார்.  

அத்துடன், சர்வதேச சட்டவிதிகளுக்கு அமைய இலங்கையின் நீதிமன்ற தீர்ப்புக்க அமைய கல்கிசையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரோஹிங்ய அகதிகளை வெளியேற்ற இனவாதிகள்; முயற்சி செய்துள்ளமை சட்டத்தை மீறிய பாரிய குற்றச்செயலாகும் எனவும் சுட்டிக்காட்டினார். 

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சாகல, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் மேற்பார்வையில் இருக்கும் ரோஹிங்ய அகதிகளை பாதுகாக்க வேண்டியது தமது கடமை எனவும் குறிப்பிட்டார். 

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொலிஸார், சமூக தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்புடன் பேச்சு நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.