தயவுசெய்து என்னைக் கொன்றுவிடுங்கள் - கதறும் ரோஹிங்யர்
-M.I.Abdul Nazar-
மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இடம்பெற்ற தாக்குதலின்போது துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் மற்றும் வெடிப்புச் சம்பவங்களின்போது ஏற்பட்ட காயங்கள் ஆகியவற்றிற்கு இலக்கான டசின் கணக்கான ரோஹிங்ய அகதிகளுக்கு பங்களாதேஷ் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
மிதிவெடிகளில் சிக்குண்ட பலர் தமது உடல் உறுப்புக்களையும், கண்களையும் இழந்துள்ளனர். தென்கிழக்கு பங்களாதேஷில் அமைந்துள்ள மிகப் பெரிய அரசாங்க வைத்தியசாலையான சிட்டாகொங்கில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரி வைத்தியர்கள் அவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
யூஸ்டினா பரா பிரதேசத்தில் தினக்கூலியாக வேலை செய்து வந்தவர் 32 வயதான யூஸுப் நோபி. அவர் மிதிவெடியில் சிக்கி தனது இரண்டு கால்களையும், இரு கண்களையும் இழந்துள்ளார். 'எனக்கு இனிமேல் வாழப் பிடிக்கவில்லை, தயவு செய்து என்னைக் கொன்றுவிடுங்கள்' எனக் கதறுகிறார்.
யுஸுபின் மனைவி 26 வயதான ராஜீவ் பேகம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். எமது குடும்பம் மிகவும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. 'எங்களுக்கு இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை' எனக் கூறுகின்றார்.
அவர் தனது குடும்பத்தினருடன் மியன்மாரிலிருந்து பங்களாதேஷ் எல்லையைக் கடக்கும்போது மிதி வெடியில் சிக்குண்டு அவரது கணவர் காயமடைந்தார்.
'நாங்கள் அனைவரும் ஒரு குழுவாக எல்லையினைக் கடந்தோம், அதில் எனது தாயார், இரண்டு சகோதரர்கள், எனது கணவர்,எனது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளடங்கியிருந்தோம். நாங்கள் எல்லையினை நெருங்கிவிட்டோம், மறுபக்கத்தில் பங்களாதேஷ் மக்களை எங்களால் பார்க்கக்கூடியதாக இருந்தது. திடீரென பெரியதொரு வெடிப்புச் சத்தம் கேட்டது. நாங்கள் சிதறி ஓடினோம். சில நிமிடங்களின் பின்னர் பங்களாதேஷ் எல்லையினை அடைந்தபோது எனது கணவரை காணவில்லை. அவரைத் தேடி எனது சகோதரர்கள் சென்றனர். அங்கே எனது கணவர் இரு கால்களையும் இழந்த நிலையில் படுகாயமடைந்திருந்ததைக் கண்டனர்' என ராஜீவ் பேகம் தெரிவித்தார்.
நாம் அவரை மூங்கில் கூடையொன்றில் வைத்துச் சுமந்துகொண்டு உள்ளூரிலிருந்த எல்லைகளற்ற சுகாதார மருத்துவ மத்திய நிலையத்திற்கு கொண்டு சென்றோம். பின்னர் யூஸுப் நோயாளர் காவு வண்டி மூலமாக கொண்டு செல்லப்பட்டார்.
யூஸுபின் கட்டிலுக்கு அடுத்த கட்டிலில் இருப்பவர் மற்றுமொரு ரோஹிங்ய அகதியான மொஹமட் ஹுஸைன். இவரும் மிதிவெடியில் சிக்குண்டு தனது ஒரு காலை இழந்தவர்.
நான் எல்லையைக் கடந்துகொண்டிருந்தபோது போது மியன்மார் இராணுவத்தினரால் புதைக்கப்பட்டிருந்த மிதி வெடியை மிதித்து விட்டேன். இதனால் ஏற்பட்ட வெடிப்பினால் சுமார் பத்தடிகள் மேலே தூக்கி வீசப்பட்டேன். நான் உணர்விழந்து தரையில் விழுந்தேன்.
பின்னர் பங்களாதேஷில் உள்ள உள்ளூர் சுகாதார கட்டடத் தொகுதியினுள் வைத்தே எனக்கு சுய நினைவு வந்தது. ஹுஸைனின் மனைவியியும் மயிரிழையில் தப்பினர். ஹுஸைனின் மனைவியே அவரது குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு ஹுஸைனையும் வைத்தியசாலையில் வைத்து பராமரித்து வருகின்றார்.
'மிதி வெடியினாலும், துப்பாக்கிச் சூட்டினாலும் இவ்வளவு மக்கள் தொகையினர் காயமடைந்ததை இதற்கு முன்னர் நான் ஒருபோதும் கண்டதில்லை' என அவ்வைத்தியசாலையின் கடமைநேர வைத்தியர் டாக்டர் தன்வீர் அஹமட் தெரிவித்தார்.
'கடந்த இரு வாரங்களில் மாத்திரம் சுமார் 50 ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு சிகிச்சையளித்திருக்கின்றோம். அவர்கள் அனைவரும் மிதி வெடியினாலும், துப்பாக்கிச் சூட்டினாலும் காயமடைந்தவர்கள். அவர்களுள் இருவர் இரண்டு கால்களையும், இருவர் இரண்டு கண்களையும் இழந்துள்ளனர்' எனவும் அவர் தெரிவித்தார்.
'படுகாயமடைந்த சுமார் 42 ரோஹிங்ய அகதிகளுக்கு வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படுகின்றது. அவர்களுள் பெரும்பாலானோர் குறைந்தது ஒரு காலையேனும் இழந்துவிடும் ஆபத்தினை எதிர்நோக்கியிருக்கின்றனர்' எனவும் அவர் குறிப்பிட்டார்.
எமது வைத்தியசாலையில் ஏற்கனவே நிரம்பியுள்ள நிலையில் புதிதாக வரும் நோயாளிகளுக்கு விடுதிகளில் கட்டில்களை வழங்க முடியாமல் இருக்கின்றது. பெரும்பாலான நோயாளிகள் வராந்தாக்களில் வைக்கப்பட்டுள்ளனர். மருந்து மற்றும் சிகிச்சை வசதிகளை அவர்களுக்கு வழங்குவதற்கு வைத்தியசாலை கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment