Header Ads



'எனது மகனையும் கொலை செய்வேன்' - பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

“போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் தொடர்பிருந்தால், எனது மகனாக இருந்தாலும் அவரைக் கொலை செய்வேன்” என்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியூடர்தே கூறியுள்ளார்.

போதை மருந்து கடத்தலுடன் தொடர்புடைய சீனர்களுக்கும் ரொட்ரிகோவின் புதல்வர் பாலோ டியூடர்தே (42)க்கும் தொடர்பிருப்பதாக பிலிப்பைன்ஸ் எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

அதன்பேரில், அந்நாட்டு செனட் விசாரணையில் ஆஜரான பாலோ, தனக்கும் போதை மருந்து கடத்தும் சீனக் குழுவுக்குக்கும் தொடர்பில்லை எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் அரசு ஊழியர்களைச் சந்தித்த ரொட்ரிகோ, தனது தேர்தல் கால வாக்குறுதியை மீள நினைவுபடுத்தினார்.

“போதை மருந்தை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்கான ஆணையைப் பிறப்பிப்பதற்கு முன், எனது குடும்பத்தினர் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால்கூட, அவர்களைக் கடுமையான முறையில் கொலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தேன். அதை மீண்டும் இங்கு நினைவுபடுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாக கடந்த வருடம் பதவியேற்ற ரொட்ரிகோ, போதை மருந்து கடத்தலுடன் தொடர்புடைய சுமார் ஒரு இலட்சம் பேரை படையினரை ஏவிக் கொலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.