தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்படுவார்களா? பாராளுமன்றத்தில் கேள்வி
ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்கள் கிராமத்துக்குள் நுழைந்தால் தாக்குதல் நடத்துமாறு ஒலுவில் பகுதி மக்களுக்கு பல்கலைகழக நிர்வாகம் கோரியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது உண்மையா? அப்படியாயின் நிர்வாகத்துக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க போகின்றீர்கள் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன சபையில் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் 1500 மாணவர்களுக்கு பரீட்சை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பரீட்சை எழுத அனுமதிக்கப்படுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் 2 ஆம் கீழ் கேள்விஎழுப்பும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒலுவில் பல்கலைக்கழகத்தில் 55 மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடை காரணமாக சுமார் 9 மாதங்களாக அவர்களுக்கு வகுப்புகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் இருவருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் அனைத்தும் நிர்வாகத்தின் பழிவாங்கல் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளினால் மாணவர்களுக்கு பரீட்சைக்குத் தோற்றும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 80 வீத வகுப்பு வரவு இருக்க வேண்டும் என்ற விதிமுறைமையின் காரணமாக 1500 பேருக்கு பரீட்சை எழுத முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே வகுப்பு வரவினை 80 வீதத்திலிருந்து 40 வீதமாக குறைக்க வேண்டும்.
மேலும் ஒலுவில் பல்கலைகழக மாணவர்கள் கிராமத்திற்குள் நுழைந்தால் தாக்குதல் நடத்துமாறு ஒலுவில் பகுதி மக்களை பல்கலைகழக நிர்வாகம் கோரியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது உண்மையா? அப்படியாயின் நிர்வாகத்திற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க போகின்றீர்கள் என்றார்.
(எம்.எம்.மின்ஹாஜ்)
Post a Comment