ரோஹின்ய மீதான இனப்படுகொலைக்கு "ஒருகாரணம்" இலங்கை முஸ்லிம்களுக்கும் படிப்பினை உண்டு
மியன்மார், ரோஹிங்கியா முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பு படுகொலையின் பின்னணியில் எண்ணெய், எரிவாயு வளங்கள் உள்ளமை தெரியவந்துள்ளது. இதில் முஸ்லிம்கள் படிப்பினை பெறுவதுடன், பாதிக்கப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்களுக்காக அதிகம் பிரார்த்திக்க வேண்டும் என்று அட்டாளைச்சேனை ஜூம் ஆப் பெரிய பள்ளிவாயலில் உரையாற்றிய அரசியல் ஆய்வாளர் ரஊப் ஷெய்ன் தெரிவித்தார்.
மியன்மார், ரோஹிங்கியா முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பு படுகொலை தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாயலில் நடைபெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
'ரோஹிங்கியா முஸ்லிம்கள், நெருக்கடிக்கான பின்னணியும், அரசியல் எதிர்காலமும்' என்ற தலைப்பில் உரையாற்றிய ஆய்வாளர் ரஊப் ஷெய்ன் மேலும் கூறுகையில்,
சுமார் 05 கோடி மக்கள் தொகை கொண்ட மியன்மார் நாட்டில் 48 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். முஸ்லிம்களில் பாண்டா, மசூஸ், ரோஹிங்கியா ஆகிய முன்று பிரிவினர் உள்ளனர். இவர்களில் ரோஹிங்கியா பிரிவு முஸ்லிம்களே இனச்சுத்திகரிப்பு, படுகொலைக்குள்ளாக்கப்படுகின்றனர். இதன் பின்னணியில் எண்ணெய், எரிவாயு வளங்கள் உள்ளமை தெரியவந்துள்ளது.
1970ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கெதிரான அட்டூழியங்கள் 2012 ஜூன் 10 ஆம் திகதி மேலும் உக்கிரமடைந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 25 முதல் அவர்களுக்கெதிரான அராஜகங்கள் பகிரங்கமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கெதிரான மியன்மார் நாட்டு அரசின் அட்டகாசங்கள், அராஜகங்கள், அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்கள் சொல்லுந்தரமன்று. சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே உள்ள 3 இலட்சம் முஸ்லிம் அகதிகளுடன், மேலும் 03 இலட்சத்து 17 ஆயிரம் பேர் இணைந்து கொண்டுள்ளனர்.
பாதுகாப்பில்லை, உணவில்லை, குடிநீரில்லை, வாகனமில்லை, கையில் எதுவுமின்றி மக்கள் 08 நாட்கள் கால்நடையாக நடந்து பங்களாதேஷ் எல்லையை வந்தடைகின்றனர். இம்மக்கள் எதிர் கொள்ளும் துன்ப துயரங்கள் இன்று சமூக வலைத் தளங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமைக்கு யார் காரணம் என்பது குறித்து நாங்கள் அதிகம் சிந்திக்க வேண்டும்.
மியன்மார் நாட்டில் வாழும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியன்மார் நாட்டு அரசினால் ஆரம்பம் முதலே ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். அவர்கள் கல்வி கற்க முடியாது, பொருளாதார ரீதியில் முன்னேற முடியாது, கல் வீடுகளை கட்ட முடியாது, விரும்பிய இடத்தில் வாழ முடியாது, பாடசாலை, மத்ரஸாக்களை நிர்மாணிக்க முடியாது. குறைந்தது திருமணம் செய்வதென்றால் கூட அரசிடம் முன்னனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளவும் முடியாது.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லை. அவர்கள் நல்ல உயர்தரத் தொழில்களில் ஈடுபடவும் முடியாது சிறிய சுத்திகரிப்பு, கல் உடைக்கும் தொழில்களைச் செய்வதற்கே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்திரமன்றி ஒதுக்குப் புறமான பிரதேசத்தில், மண் குடிசைகளிலேயே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர், பாரியளவிலான தொழில்களிலும் அவர்கள் ஈடுபட முடியாது.
ரோஹிங்கியா முஸ்லிம்களின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. வயோதிபர்களை தங்களுடன் அழைத்துச் செல்ல முடியாது வீடுகளில் தங்க வைக்கப்படுகின்றனர். அவ்வாறு தங்க வைக்கப்பட்டவர்கள் வீட்டுடனே தீயிட்டு எரிக்கப்படுகின்றனர். தினசரி கொல்லப்படுபவர்களின் ஜனாஸாக்களையேனும் முறையாக அடக்கம் செய்வதற்கு நாதியற்றவர்களாக, மக்கள் துன்ப, துயரங்களோடு உயிரை கையில் பிடித்துக் கொண்டு தினசரி நாட்களைக் கடத்தி வருகின்றனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழும் ரெக்கியாங் மாநிலத்தில் எண்ணெய், எரிவாயு வளங்கள் உள்ளமை கடந்த 2012 ஆம் ஆண்டு நிரூபணமாகியுள்ளது. இவ்வாறு மக்களுக்கு நெருக்குதல்களை தொடர்ந்து கொடுத்து, அவர்களை துரத்தி வளங்களை கைவசப்படுத்திக் கொள்வதே வல்லரசுகளின் சதித்திட்டமாக உள்ளது. இச்சதியில் இலங்கை முஸ்லிம்களான நாங்கள் அதிகம் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
Post a Comment