Header Ads



7 நாட்களில் 40.000 ரோஹின்யர்கள் வெளியேற்றம் - நதியில் மிதக்கும் உடல்கள்


மியான்மரின் ரகைன் மாகாணத்தில் ஒரு வாரத்துக்கு முன்னர் ஏற்பட்ட  வன்முறையைத் தொடர்ந்து இதுவரை சுமார் 40 ஆயிரம் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் அண்டை நாடான பங்களாதேஷுக்கு அகதிகளாக வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

எல்லை தாண்டி தஞ்சம் அடைந்துள்ள குடும்பங்களுக்கு உணவு மற்றும் இருப்பிடம் தேவை என்று பல தொண்டு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியன்று ரொஹிஞ்சாகள் பொலிஸார் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு கொத்துக்கொத்தாக ரொஹிஞ்சா முஸ்லிம்கள் இறந்துள்ளனர்.

பங்களாதேஷை அடைவதற்காக நாஃப் நதியைக் கடக்க பல ரொஹிஞ்சாக்கள் முயன்றுள்ளனர். வெள்ளிக்கிழமையன்று, அந்நதியில் மேலும் 16 சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதன் மூலம், படகு நீரில் மூழ்கியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 40 ஆக அதிகரித்துள்ளது.

மியான்மர் எல்லையில் உள்ள பங்களாதேஷ் நகரான டெக்நாஃபின் பொலிஸ் தலைமை அதிகாரி, மைனுதீன் கான், ஒரு சிறுமியின் உடல் உட்பட இறந்தவர்களின் உடல்கள் அந்த நதியில் மிதந்தாக வெளிநாட்டு செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

மியான்மரின் மனித உரிமை விவகாரங்களுக்கான , ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி யாங்கீ லீ,

 "மோசமடைந்து வரும் வன்முறைச் சுழல்" மிகுந்த கவலை தருவதாகவும், அச்சுழல் உடனே உடைக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தஞ்சம் தேடி இதுவரை 38,000 பேர் மியான்மரில் இருந்து எல்லை தாண்டி வந்துள்ளதாக பங்களாதேஷில் உள்ள ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"வீதி ஓரங்களில் பல தற்காலிக கூடாரங்களையும் குடில்களையும் நாங்கள் பார்த்துக்கொண்டுள்ளோம். இருக்கும் எல்லா இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன," என்று ஐ.நா அகதிகள் ஆணையத்தின் பிராந்திய செய்தித் தொடர்பாளர் விவியன் டேன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

எல்லையைக் கடக்க முயலும் மக்கள் சுட்டுக்கொல்லப்படுவதாக செய்திகள் வருவதாகவும், அவர்களை சுடுபவர்கள் யார் என்பது இன்னும் தெளிவாகவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் எல்லைதாண்டி பங்களாதேஷ் வருவதற்காகக் காத்திருப்பதாக சர்வதேச செய்திகள்தெரிவிக்கின்றன. 

பொலிஸாரின் சோதனைச் சாவடி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பொலிஸார் கொல்லப்பட்டதன் பின்னர் மியான்மார் இராணுவமும் பௌத்த மதக் கும்பல்களும் பழி வாங்கும் நோக்குடன் தாக்குதல் நடத்துவதாக ரொஹிஞ்சா செயல்பாட்டாளர்களும், தப்பி வந்தவர்களும் தெரிவித்துள்ளனர். இராணுவத்தினர் ரொஹிஞ்சாக்கள் வசிக்கும் கிராமங்களை எரித்து, அங்கு வசிப்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மியான்மரின் மிகவும் ஏழ்மையான பகுதியான ரகைன் மாகாணம், சுமார் 10 லட்சம் ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு வாழ்விடமாக உள்ளது. பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் மியான்மரில், பல தசாப்தங்களாக அடக்குமுறைகளை அவர்கள் சந்தித்து வருகின்றனர். பங்களாதேஷில்  இருந்து சட்ட விரோதமாகக் குடியேறியவர்களாக அவர்கள் கருதப்படுவதால் அந்நாட்டின் குடிமக்களாக அவர்கள் கருதப்படுவதில்லை.

ரகைன் மாகாணத்தில் உள்ள சுமார் 11 ஆயிரம் பௌத்த குடும்பங்களை வெளியேற்றியுள்ளதாக மியான்மர் அரசாங்கம் தெரிவிக்கின்றது. கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மோசமான வன்முறைச் சம்பவங்கள் அங்கு நடைபெற்றுவருகின்றன. 

கடந்த 2016 ஆம் ஆண்டு, ஒரு எல்லைப்புற சோதனைச் சாவடியில் நடந்த தாக்குதலில், ஒன்பது பொலிஸார் கொல்லப்பட்ட பின்னர் அவை பெரும் அளவில் அதிகரித்துள்ளன. இனக்குழுக்கள் இடையே பதற்றம் நிலவி வந்தாலும், அதுவரை ஆயுதப் போராட்டம் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

No comments

Powered by Blogger.