முஸ்லிம்களின் 60 ஏக்கர் காணியை, கபளீகரம் செய்ய சதி - கண்வைத்தார் அதிகாரி
-SNM.Suhail-
வடக்கே புல்மோட்டை முதல் தெற்கே வெருகல், மேற்கே அநுராதபுரம் மாவட்டம், கிழக்கே இந்து சமுத்திரத்தையும் எல்லையாக கொண்ட திருகோணமலை மாவட்டம் 2529 சதுர கி.மீ. நிலப் பரப்பை கொண்டது. 152,854 பேர் அதாவது, 40.42 வீத முஸ்லிம்களை கொண்ட இம்மாவட்டத்தில் முஸ்லிம்கள் மிகக் குறைந்த பரப்பு காணியிலேயே வசிக்கின்றனர். ஆனால் அங்கு முஸ்லிம்கள் வாழும் பகுதியை மையப்படுத்தி ஆயிரத்தெட்டு காணிப்பிரச்சினைகள் திட்டமிட்டு தோற்றுவிக்கப்படுகின்றன.
புல்மோட்டை, நீனாக்கேணி, குச்சவெளி, தோப்பூர், சம்பூர், கருமலையூற்று உள்ளிட்ட பகுதிகளில் இது தொடர் பிரச்சினையாகவே இருக்கின்றது. குறிப்பாக இப்பிரதேசங்களில், காணி உரித்து பெறுவதில் சிக்கல், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், இராணுவ முகாம்கள், தளங்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களம், அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல வடிவங்களில் காணிப்பிரச்சினைகள் தொற்றுநோயாய் பரவியிருந்தது.
இந்த தொடரில் இன்று நிலாவெளியும் இணைந்திருக்கிறது. அங்கு புதிதாக சுற்றுலாத்துறை தொடர்பான பிரச்சினையாக இருக்கலாம் என சந்தேகிக்க தோன்றுகின்றது. அத்தோடு சில அரசியல் சக்திகள் சுற்றுலா விடுதிகளை அமைக்க இந்தக் காணியை கபளீகரம் செய்ய முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.
நிலாவெளி பிரதேசத்தில் உள்ள ரஸூல் தோட்டம் என்கிற பகுதியில் 60 ஏக்கர் நிலம் மீது அதிகாரத்திலுள்ள ஒருவர் கண் வைத்துவிட்டதாகவும் அதனை அபகரிக்க பல்வேறு வகையிலும் மக்களுக்குத் தொந்தரவு கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ரஸூல் தோட்டம் காணி நிலாவெளி சுற்றுலா பகுதியான கடற்கரைக்கு அண்மித்ததாக காணப்படுகின்றது. அங்கு சுற்றுலா பிரயாணிகளை குறிவைத்து பாரிய விடுதிகள் அமைக்க முடியும். இதனாலேயே இதனை கபளீகரம் செய்யத் திட்டமிடுகின்றனர் என பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் காணி அளவீடு செய்வதற்காக அதிகாரிகள் வந்தபோது மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது. இதற்கு பின்னர் சில சந்தர்ப்பங்களில் இக்காணியை அளவிட அதிகாரிகள் முயற்சித்துள்ளனர். இதன் தொடராக நேற்றுமுன்தினம் புதன்கிழமை ரஸூல் தோட்டக் காணியை அத்துமீறி அளவீடு செய்ய அதிகாரிகள் எத்தனித்தபோது பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இச்சம்பவத்தையடுத்து பிரதேசத்தில் பதற்றநிலை தோன்றியது.
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வசித்து வரும் முஸ்லிம்களுக்கு சொந்தமான அறுபது ஏக்கர் காணியை அளவீடு செய்வதற்கு மாகாண காணித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் குச்சவெளி பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஸ்தலத்திற்கு வருகை தந்தனர். இதன்போது மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதோடு பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையே வாய்த் தர்க்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் மக்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தியவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இதன் பின்னர் பொலிஸ் பாதுகாப்போடு காணி அளவீடு செய்யப்பட்டது.
அடையாளமிடப்பட்ட எல்லைக்குள் பிரதேச செயலாளரினால் காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பல குடிமனைகளும் விடுதிகளும் சிறு தோட்ட பயிர்களும் காணப்படுகின்றன.
நிலாவெளி ரஸூல் தோட்ட காணியில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக தோட்டங்களும் மற்றும் குடியிருந்து வந்த காணியினை 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுற்றுலாத்துறை சபையினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் கடந்த பல வருடகாலமாக வசித்து வருவதோடு அங்கு வாழ்வாதாரத்திற்காக சிறுதோட்டம் மற்றும் விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பகுதிக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் விஜயம் மேற்கொண்டு பொலிஸாருடன் பேசி மக்களை சமரசப்படுத்தினார். அத்தோடு, இது விடயமாக மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார்.
இதனிடையே, குறித்த காணியினை அளவிட்டு நிரந்தரமாக வசித்த மற்றும் தோட்டம் செய்த மக்களை தாம் எந்த விதத்திலும் எழுப்பவில்லை. அவர்களின் நிரந்தர வீடுகள் மற்றும் கட்டடங்கள் காணப்படும் இடங்கள் தொடர்பாக தாம் உரிய அதிகாரிகளுக்கு அறிக்கைகள் சமர்ப்பித்துள்ளோம். தாம், மக்கள் குறித்த பகுதியில் வசிப்பதை உறுதிப்படுத்தியதாகவும் குச்சவெளி பிரதேச செயலாளர் தெரிவித்தார். அத்தோடு இது விடயமாக மாவட்ட பொலிஸ் மா அதிபர், பாராளுமன்ற (Oversight Committee) கூட்டத்தின் முடிவையும் நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த நிலையில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு பாராளுமன்றக் (Oversight Committee) கூட்டத்தில் மீளவும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு தீர்ப்பதற்கு ஆவண செய்யப்படும் என மாகாண சபை உறுப்பினர் அன்வர் மற்றும் அதிகாரிகளால் விளக்கம் அளிக்கப்பட்டதையடுத்து மக்கள் அமைதியாக சென்றனர்.
அடுத்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் நிலாவெளியில் காணிப் பிரச்சினை தொடர்பாக கூட்டமொன்றை நடத்த பிரதேச வாசிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இப்பகுதியிலுள்ள முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை குறித்து ஆராயப்பட வேண்டும், அத்தோடு பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இவ்விவகாரத்தின் பின்னால் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது. ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்காகவே இவ்வாறு அதிகாரிகளையும் பொலிஸ் பலத்தையும் பயன்படுத்தி அக்காணியை சுவீகரித்துக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல்வாதிகள் தமது சுயநலத்திற்காக மக்களை அச்சுறுத்துவதற்கும் அரசியல் அதிகாரத்தையும் பொலிஸ் பலத்தையும் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தடுக்கமுடியும். இதற்கு முஸ்லிம் தலைமைகள் ஒற்றுமையாகத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க திட்டமிட்டு காய் நகர்த்தலை மேற்கொள்ள வேண்டியது இன்றைய தேவையாகும்.
Post a Comment