5 வயது சிறுவன், இப்படியும் செய்தான்..!
கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸாரால் தேடப்பட்ட பிள்ளை ஒன்று தனது சொந்த வீட்டிலேயே நூதனமாக ஒளிந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாதம்பே, புளியன்கடவர, வெல்பொதுவெ பிரதேசத்தை சேர்ந்த ஐந்து வயதான இச்சிறுவனை முன்பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக அவரது பெற்றோர் தயார்படுத்தி வைத்துள்ளனர். சிறிது நேரத்தின் பின்னர் முன்பள்ளிக்கு அழைத்துச் செல்ல தயாரான போது பிள்ளை காணாமல் போயிருந்தமையால் அவரது பெற்றோர் வீடு முழுவதும் தேடிப்பார்த்துள்ளனர்.
அதன்போது, வீட்டுக்கு அருகிலுள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்று அவ்வழியாக வேகமாக பயணித்திருந்தமையால் அந்த லொறியில் பிள்ளை கடத்தப்பட்டுள்ளதாக எண்ணி பிள்ளையின் பெற்றோர் 119 அவசர பொலிஸ் பிரிவுக்கு அழைப்பு விடுத்து தமது பிள்ளை கடத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பிள்ளை கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் லொறியை பின்தொடர்வதற்கு இரு மோட்டார் சைக்கிளில் பொலிஸார் புறப்பட்டு சென்ற அதேவேளை, மேலும் சில பொலிஸார் பிள்ளையின் வீட்டுக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
குழந்தையின் பெற்றோரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட பொலிஸார், வீட்டின் சுற்றுப்புறத்தில் தேடுதலை மேற்கொண்டதுடன் வீட்டிக்கு உட்புறத்திலும் தேடியுள்ளனர்.
அதன்போது, காணாமல் போனதாக கூறப்பட்ட பிள்ளை வீட்டிலிருந்த சலவை இயந்திரத்தினுள் அமர்ந்திருப்பதனை கண்ட பொலிஸ் உத்தியோகத்தரொருவர் இயந்திரத்தின் கதவை திறந்துள்ளார்.
அதனுள் வியர்வை வழிந்த முகத்தோடு மிகவும் சிரமத்துடன் அமர்ந்து கொண்டிருந்த பிள்ளையை பொலிஸார் மீட்டனர். பிள்ளையின் புத்தகப்பையும் சலவை இயந்திரத்தினுள்ளேயே இருந்துள்ளது.
பிள்ளையிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, தனக்கு முன்பள்ளிக்கு செல்வதற்கு விருப்பம் இல்லையெனவும், அதற்காகவே தான் சலவை இயந்திரத்தினுள் ஒளிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
இப்பிள்ளை சுமார் 1 மணித்தியாலமாக சலவை இயந்திரத்தினுள் இருந்துள்ளதாகவும், இன்னும் சற்றுநேரம் அவர் அவ்வாறே இருந்திருந்தால் உயிராபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வீட்டிலிருந்த பிள்ளையை கண்டுபிடிப்பதற்காக சிலாபம் பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் வஸந்த ஹேரத், சிலாம் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி சுரங்க தஹநாயக்க மற்றும் மாதம்பை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வஸந்த குமார ஆகியோர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
Post a Comment