புதிய வன்முறைகளில் 3.000 ரோஹின்யர்கள் கொல்லப்பட்டுள்ளனர் - பங்களாதேஷ் அறிவிப்பு
வன்முறை நீடித்து வரும் மியன்மாரின் ரகின் மாநிலத்தில் ‘இனப்படுகொலை’ ஒன்று இடம்பெறுவதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ.எச் மஹ்மூத் அலி குறிப்பிட்டுள்ளார். இந்த வன்முறைகளால் பங்களாதேஷில் சுமார் 300,000 ரொஹிங்கியாக்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர்.
“சர்வதேச சமூகம் இதனை ஒரு இனப்படுகொலை என்று கூறுகிறது. நாமும் இதனை ஒரு இனப்படுகொலை என்றே வர்ணிக்கிறோம்” என்று டாக்காவில் இராஜதந்திரிகளுடன் இடம்பெற்ற சந்திப்புக்கு பின்னர் மஹ்மூத் அலி செய்தியாளர்களிடம் கூறினார்.
ரொஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பில் அரசியல் தீர்வு மற்றும் மனிதாபிமான உதவிகளை பெறும் முயற்சியாக அலி மேற்கத்தேய மற்றும் அரபு இராஜதந்திரிகள் மற்றும் பங்களாதேஷை தளமாகக் கொண்ட ஐ.நா நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த இரண்டு வாரத்தில் சுமார் 300,000 அகதிகள் பங்களாதேஷுக்கு தப்பி வந்திருப்பதாக அவர் இராஜதந்திரிகளிடம் குறிப்பிட்டார். இதன்மூலம் பங்களாதேஷில் உள்ள ரொஹிங்கிய அகதிகளின் எண்ணிக்கை 700,000 ஆக உயர்ந்துள்ளது.
“இது தற்போது தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது” என்று அலி கூறினார்.
தற்போதைய புதிய சுற்று வன்முறைகளில் 3,000 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ராஜதந்திரிகளிடம் விளக்கியுள்ளார். இது 1,000 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐ.நாவின் முந்தைய அறிவிப்பை விடவும் அதிகமாகும்.
Post a Comment