காட்டுயானை தாக்கி 2 ரோஹிங்யர்களும், பாம்பு கடித்து மற்றொருவரும் மரணம்
ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த தற்காலிக முகாமை காட்டு யானைகள் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் குழந்தையும் பலியாகியுள்ளனர்.
திங்கட்கிழமை அதிகாலை பங்களாதேஷ் கொக்ஸ் பஸாரின் மலைப்பகுதியில்இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகவும் மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளதாகவும் கொக்ஸ் பஸார் பொலிஸ் அதிகாரி கேயி கிஸ்லு தெரிவித்துள்ளார்.
யானைகள் நடமாடும் காட்டுப்பாதையை மறித்தவாறு மேற்படி தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாலேயே அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்சுல் அஸ்லம் (வயது 55), செய்யிதுல் (வயது 2) ஆகிய ரோஹிங்ய அகதிகளே சம்பவத்தில் பலியாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
விஷப் பாம்பு தீண்டியதில் ரோஹிங்ய முஸ்லிம் ஒருவர் பலியாகியுள்ள சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பற்ற மலைப் பிரதேசங்களில் தற்காலிக முகாம்களை அமைத்து தங்கியிருப்பதனால் பலவிதமான இன்னல்களுக்கு ரோஹிங்ய முஸ்லிம்கள் முகம் கொடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
மியன்மார் ராக்கைன் பகுதியில் ஆகஸ்ட் 25 தொடக்கம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இராணுவத்தினரின் அட்டூழியங்கள் காரணமாக 430,000 இற்கும் அதிகமான ரோஹிங்ய முஸ்லிம்கள் பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஐ.நா. சபை மியன்மார் இராணுவத்தின் நடவடிக்கைகளை “இனச்சுத்திகரிப்புக்கான பாடப்புத்தக உதாரணம்” என வர்ணித்துள்ளது..
Post a Comment