Header Ads



2 செவிகளும் தெரியும்படியான புகைப்படத்துடனே, இனிமேல் தேசிய அடையாள அட்டை

இரு செவிகளும் தெரியும்படியான புகைப்படத்துடனேயே, தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் இம்மாதம் தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படுவதாக, கிழக்கு மாகாண ஆட்பதிவுத் திணைக்கள பதவிநிலை உதவியாளர் ஷெ‪ய்ன் முஹம்மத் ஸுல்பிகார் தெரிவித்தார்.

புதிய நடைமுறை தொடர்பாகக் கேட்டபோது, அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஸ்மார்ட் கார்ட் எனும் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவதற்குரிய முன்னேற்பாடாக, ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

“இருபக்க காதுகளைக் கொண்ட ஆளொருவரின் புதிய புகைப்படம், 35 மில்லிமீற்றர் அகலமும் 45 மில்லிமீற்றர் உயரமும் கொண்டதாக இருக்க வேண்டும். அதனடிப்படையிலேயே, விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

“ஆட்பதிவுத் திணைக்களத்தின் மாகாண ஆட்பதிவுத் திணைக்கள அலுவலகம் மட்டக்களப்பில் இயங்குவதால், தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்களை, ஆடையாள அட்டையில் திருத்தமாக பொறித்துக் கொடுக்க முடிகின்றது.

“கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கூடாக, நாளாந்தம் சுமார் 200 ஆள் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை நாம் பெறுகின்றோம்.

“இவற்றில், தமது உருக்குலைந்த, தெளிவில்லாத ஆள் அடையாள அட்டைகளைக் கொண்டுள்ளவர்களும், பெயர் மாற்றங்களைச் செய்ய விண்ணப்பிப்போருமாக, புதுப்பிப்பதற்காக சுமார் 100 பேருடைய விண்ணங்கள், மாகாண ஆட்பதிவுத் திணைக்களத்துக்குத் தினமும் வந்து சேர்கின்றன.

“நாம், விண்ணப்பதாரிகளிடமிருந்து நேரடியாக விண்ணப்பங்களை ஏற்பதில்லை. அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர், கிராம சேவகர், பிரதேச செயலாளர் ஊடாக, ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்றார்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

No comments

Powered by Blogger.