இலங்கையில் 22 சதவீத முஸ்லிம்கள் வறுமையானவர்கள், நோய்களால் பாதிக்கப்படுவர் தொகை மும்மடங்கு
-Ash Sheikh SHM Faleel-
இலங்கை சமூக நிலைவரத்தை குறுக்கு வெட்டுமுகமாக நோக்கும்போது அதாவது, பகுப்பாய்வு செய்யும் போது இலங்கை தஃவா மற்றும் சமூகக் களங்களில் பணிபுரிவோர் முதன்மைப்படுத்தி நோக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன.
01. முஸ்லிம் சமூகத்துக்குள் நாஸ்திகம், சடவாதம், நவீன நூற்றாண்டுக்கு இஸ்லாம் பொருத்தமா என்ற சந்தேகம் போன்றன வலுப்பெற்று வருகின்றன.
02.ஷியா, காதியானி, பெண்ணிலைவாதம், பின் நவீனத்துவம் என்பன தீவிரமாக ஊடுருவி வருகின்றன.
03. தனித் தனியாகவும் குடும்பங்களாகவும் சிலர் மதம் மாறிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாத்தைப் பற்றி விமர்சன ரீதியாக எழுதப்படும் சிங்கள மொழியிலான நூல்களும் வெப்தளங்களும் சிங்கள மொழி மூலம் கற்பதும் இதற்கான பிரதான காரணங்களாகும்.
04. சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் செயற்படும் உளவுஸ்தாபனங்களும் நிறுவனங்களும் முஸ்லிம்களைப் பின் தொடர்ந்த வண்ணம் உள்ளன. முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயங்களை உருவாக்குவதிலும் அவர்களுக்கு மத்தியில் பிளவுகளை தோற்றுவிப்பதிலும் அவற்றின் பங்கு அதிகம்.
05. முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு மிகவுமே பலவீனமான கட்டத்தை அடைந்து விட்டது.
06. ஒப்பீட்டு ரீதியில் இலங்கை முஸ்லிம்கள் கல்வித் துறையில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். (புள்ளி விபரங்கள் உள்ளன.
07. இலங்கை முஸ்லிம்களில் 22% ஆனவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழுகிறார்கள். 50,000 குடும்பங்கள் அடிப்படை உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத ‘பகீர்கள்’ எனும் நாமத்துடன் வாழுகிறார்கள்.
08. இலங்கையில் தொற்றா நோய்கள் (Non Communicable Deceise) களால் பாதிக்கப்படுவர்களில் முஸ்லிம்களின் தொகை மும்மடங்காகும்.
09. போதைவஸ்துப் பாவனை சமூக வலைத் தளங்களுக்கு அடிமையாதல், குடும்ப அமைப்பின் சிதைவு, பிற சமூகங்களுடனான உறவு விரிசல் என ஏகப்பட்ட பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
10. இது தவிர சர்வதேச ரீதியாக முஸ்லிம் சமூகம் சந்திக்குக்கும் துன்பங்களை வார்த்தைகளால் வடித்து முடிக்க முடியாது.
மொத்தத்தில்- மிகைப்படக் கூறுவதாக எவரும் நினைத்து விடலாகாது.- ஒரு பின்தங்கிய, பலவீனமான, நொந்துபோன சமூகமாக முஸ்லிம் சமூகம் உள்ளது. இஸ்லாமிய பிரசாரத்தில் சம்பந்தப்படுவோரும் பொறுப்பான பதவிகளில் அமர்ந்திருப்போரும் சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுவோரும் இவற்றை கருத்தில் எடுக்க வேண்டும். சில்லறைத்தனமான கருத்து வேறுபாடுகளில் தொடர்ந்தும் ஈடுபடுவது சமூகத்தை இன்னும் பலவீனப்படுத்தும் என்பதை மறக்கலாகாது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றாத நிலையில் மறுமையை நோக்கிச் செல்வோர் தமது நிலைப்பாடுகளை எப்படி நியாயப்படுத்தலாம்?
யாரோ கூறியது போல் அத்தஹிய்யாத்தில் விரலை அசைப்பதா? இல்லையா? என்ற பாரம்பரியமான கருத்து வேறுபாட்டைப் பற்றி நாம் விவாத்தித்து சரி பிழை கண்டு கொண்டிருக்கையில் உலகிலுள்ள பல கோடிப் பேர் ஸஹாதத்துக் கலிமாவையே அறியாத நிலையில் இருக்கிறார்கள்.(இவை எமது பணிவான அவதானங்களும் கருத்துக்களுமாகும்.குர்ஆன் கூறுவது போல் ”வதவாஸவ் பில்ஹக்” சத்தியத்தைக் கொண்டு பரஸ்பரம் உபதேசிப்பதற்கான ஒரு முயற்சி மட்டுமே.இவற்றில் தவறுகள் இருக்கலாம்.மனதைப் பிழிந்து கொண்டிருக்கும் கவலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடனேயே இந்த ஆக்கம் எழுதப்படுகிறது.எவரது மனதையாவது பாதித்திருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னிப்பது நல்லதாகும்.எழுதும் நாம் எமது கடமைகளை எந்த அளவு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற அச்சமும் உள்ளது.அல்லாஹ்வே எம்மை மன்னிக்க வேண்டும்.)
சுருக்கமாக பின்வரும் ஆலோசனைகளை முன்வைக்கமுடியும்
01. அதி முக்கியமான பிரச்சினை களையும் சவால்களையும் மிகத் துல்லியமாக இனம் காண்போம். இதில் இயக்க, கட்சி முரண்பாடுகளை ஒரு பக்கத்தில் தூக்கி எறிவோம். அல்லாஹ் பார்க்கிறான் என்ற அச்சமும் பரந்த வாசிப்பும் தேடலும் பரந்த மனப்பாங்கும் இதற்குத் தேவை.
02. முஸ்லிம் சமூகத்திலுள்ள துறைசார்ந்த நிபுணர்கள் சமூகப் பணிகளுக்கான காத்திரமான மூலோபாயத் திட்டங்களை (Stretegic Plane) வகுக்க வேண்டும். இப்படிச் செய்தால் எமது வளங்கள் திறமைகள், நேரகாலம் என்பன வீணடிக்கப்படமாட்டாது. இலக்கு தெளிவாகும். வேலைப்பகுப்பு நடக்கும் துறைசார்ந்தவர்கள் மாத்திரம் ஈடுபடுவார்கள்.
03.உள்ளங்களில் உள்ள பதவி மோகம், அகம்பாவம், அறிவீனம், பணஆசை, புகழாசை, போன்ற உள நோய்களிலிருந்து தூரமாக வேண்டும் என்ற ஆழமான விருப்பம் என்பன உருவாக்கப்பட வேண்டும். சமூக நலன்களுக்காக எமது தனிப்பட்ட நலன்களை குர்பான் கொடுப்போம்.
அல்லாஹ் எம் அனைவரையும் பரந்த மனப்பாங்குடன், அறிவுத் தெளிவுடன், அவனுக்காக என்று மட்டும் செயட்படுபவர்களது கூட்டத்தில் சேர்ப்பானாக!
Post a Comment