Header Ads



பஸ்ஸுக்காக நின்ற 15 வயது மாணவன் மீது, பாலியல் துஷ்பிரயோகம்

வவுனியாவில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவனின் தந்தை வவனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா, வேலன்குளம், பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய  பாடசாலை மாணவன் நேற்று  மாலை 6 மணியளவில் கிரிக்கெட் பயிற்சி முடிந்து வீடு செல்வதற்காக வவுனியா பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

பேருந்து இல்லாததன் காரணமாக அங்கு நின்ற வேளை இரவு  8 மணியளவில் இ.போ.ச.  பேருந்து தரிப்பிடத்தில் செட்டிகுளம், முதலியாகுளம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் குறித்த சிறுவனை அழைத்து தனியாக நிற்பதற்கான காரணத்தைக் கேட்டறிந்ததுடன் நாளை காலை அனுப்பிவைப்பதாகத் தெரிவித்து முச்சக்கரவண்டியில் வெளிக்குளம் பகுதியிலுள்ள வாடகை வீடொன்றிலிருக்கும் தனது வீட்டிற்கு நேற்று இரவு அழைத்துச் சென்று மாணவனை அங்கு தங்கவைத்து உணவுப் பொருட்களுடன் மயக்க மருந்தை கொடுத்து துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார் 

குறித்த நபர் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட,  மாணவன் குறித்த வீட்டிலிருந்து தப்பித்து மறுபடியும் இரவு 11 மணியளவில் இ.போ.ச. பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இ.போ.ச பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மாணவனிடம் அங்கு வந்த ஆசிரியர் ஒருவர் இரவு நேரத்தில் தனியாக நிற்பதற்கான காரணத்தினையும் நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளார். இதையடுத்து குறித்த ஆசிரியர் மாணவனின் தந்தையிடம் அழைத்துச் சென்று நிலைமைகளைத் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து இன்று காலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற மாணவனின் தந்தை  தனது மகனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.   

இதையடுத்து மாணவனிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

34 வயதுடைய குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிகிச்சைகளுக்காகவும் வைத்திய சோதனைக்காகவும் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

1 comment:

  1. சரியா சட்டத்தை அமுல் படுத்தினால் எல்லாம் சரியா வரும்.

    ReplyDelete

Powered by Blogger.