இந்தியா - மியான்மர் இடையே 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆனது
இந்திய பிரதமர் மோடியின் மியான்மர் பயணத்தின்போது இரு நாடுகளிடையே 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது.
பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் இருந்து மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக நேற்று மியான்மர் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். இது மியான்மருக்கு அவர் செல்லும் முதல் பயணமாகும். தலைநகர் நய் பியி டாவில் பிரதமர் மோடிக்கு, மியான்மர் அதிபர் ஹிடின் கியாவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி, மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி-யை இன்று சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்த சந்திப்பின்போது 11 ஒப்பந்தங்கள் கையெழுப்பமாகின.
இருநாடுகளிடையே கடல்வழி பாதுகாப்பு குறித்து ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் கப்பல் போக்குவரத்து குறித்த தகவல் பரிமாற்றம் சம்பந்தமான ஒரு ஒப்பந்தத்திலும் இரு நாட்டு தலைவர்களும் கையொப்பமிட்டனர்.
மியான்மர் நாட்டில் தேர்தல் நடத்த உதவுவதற்காக அந்நாட்டு தேர்தல் ஆணையத்திற்கும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் இடையேயும் ஒரு ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது. கலாச்சார பரிமாற்ற திட்டம் தொடர்பாகவும் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் பத்திரிக்கையாளர் சங்கங்கள் இடையேயும் ஒப்பந்தம் கையொப்பமானது. மேலும் மருத்துவம், பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப விரிவாக்கம் சம்பந்தமான ஒப்பந்தங்களும் கையொப்பம் ஆகி உள்ளது. மியான்மரில் மகளிர் போலீஸ் பயிற்சி மையம் அமைப்பதற்காகவும் ஒரு ஒப்பந்தத்தில் இரு நாட்டு தலைவர்களும் கையொப்பமிட்டனர்.
Post a Comment