முசலி முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கு எதிரான மனு, உயர் நீதிமன்றால் தள்ளுபடி
முசலிப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் அனைத்து செயற்பாடுகளும் அனைத்து குடியேற்றங்களும் சட்டவிரோதமானவையெனவும், காணிகள் வழங்கப்பட்டிருப்பது சட்டத்திற்கு முரணானதெனவும் அவற்றுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கும் படியும் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உ டந்தையாக இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் அனைத்து ஆவணங்களையும் மன்றில் சமர்ப்பித்தனர். 2012 ஆம், 2017 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வில்பத்து தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள், சட்டரீதியான முறையில் முறையாக வெளியிடப்படவில்லை. அப்பகுதி மக்களுக்கு எவ்வித அறிவித்தலும் வழங்கப்படாது வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என்பதை நீதியரசர் குழாமிற்கு தெளிவுபடுத்தினர். இதனையடுத்தே மூவரடங்கிய நீதியரசர் குழு வழக்கினை தள்ளுபடி செய்தது.
இலங்கை வன ஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பு, சூழலியல் பௌண்டேசன் என்பன தாக்கல் செய்திருந்த இவ்வழக்கில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, அமைச்சர் ரிசாத் பதியுதீன் உட்பட 10 பேர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இவ்விபரங்கள் நேற்று கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடக மாநாட்டில் வெளியிடப்பட்டன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் யாப்பு மற்றும் சட்ட விவகார பணிப்பாளர் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட வழக்கினைத் தள்ளுபடி செய்துள்ளமை முசலி பிரதேச குடியேற்றங்கள் சட்டபூர்வமானது என ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. 2012, 2017 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீள் குடியேறியுள்ள மக்கள் மத்தியில் நிலவிவந்த சந்தேகம் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம் நீங்கியுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மனித உரிமை ஆணைக்குழுவில் முசலி பிரதேச மீள்குடியேறியுள்ள மக்களின் 30 முறைப்பாடுகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. தேவையான ஆவணங்களும் கையளிக்கப்பட்டுள்ளன. அதுதொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதியினால் மாவில்லு பேணற்காடு வர்த்தமானி மற்றும் 2012 ஆம் ஆண்டின் வர்த்தமானி தொடர்பில் ஆராய ஐவர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
எனவே, முசலி பிரதேச மீள்குடியேற்றங்கள் சட்டரீதியானவை. அவை சட்டரீதியற்றவை என்று தெரிவிக்கப்பட்டால் தேவையேற்படின் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கும் நாம் தயாராக இருக்கிறோம். உயர்நீதிமன்றம் வழக்கினைத் தள்ளுபடி செய்துள்ளமை அங்கு மீள்குடியேறியுள்ள மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றார்.
இம் மாதம் 4 ஆம் திகதியே உயர்நீதிமன்றம் வழக்கினைத் தள்ளுபடி செய்தது.
Post a Comment