இன்று தெளிவான தீர்மானங்களை எதிர்பார்க்கின்றோம் - மனோ
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அரசியலமைப்பு தயாரிக்கும் பிரதான வழிநடத்தல் குழு என்பன தொடர்பில் தெளிவான தீர்மானங்களை எதிர்பார்க்கிறோம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
பிரதான வழிநடத்தல் குழுவுக்கு சில கட்சிகள் தமது யோசனைகளை இதுவரை முன்வைக்காமல் இருக்கின்றமை தொடர்பாக எமக்கு பாரிய சந்தேகம் எழுகிறது. எனவே இவை தொடர்பில் நாம் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பி எமது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளவுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று -21- நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மனோ கணேசன் இவற்றைக் குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது எமது பல்வேறு சந்தேகங்களுக்கான தீர்வுகளை எதிர்பார்க்கின்றோம். இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் கலந்துகொள்ளவுள்ளன. அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். இந்தக் கூட்டத்தின்போது முக்கியமாக 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசப்படவிருக்கிறது.
மாகாண சபைத் தேர்ல்களை ஒரே தினத்தில் நடத்துவதற்காக 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவருவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. அதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் அமைச்சரவையில் இணக்கம் தெரிவித்திருந்தனர். ஆனால் பின்னர் சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் அந்த 20 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அறிந்தோம்.
அதாவது மாகாண சபை தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதால் ஒரு சில மாகாண சபைகளின் தேர்ல்கள் பிற்போடப்படுவதை சுதந்திரக் கட்சி விரும்பவில்லை எனத் தெரிகின்றது. எனவே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடானது தேர்தல்கள் உரிய காலப்பகுதியில் நடத்தப்பட வேண்டும் என்பதாகும். எனவே இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என நம்புகின்றோம்.
அதேபோன்று அரசியலமைப்பை தயாரிக்கும் பிரதான வழிநடத்தல் குழு தொடர்பாகவும் சில சிக்கல்கள் உள்ளன. இந்தக் குழுவுக்கு ஒரு சில கட்சிகள் எழுத்து மூலம் தமது யோசனைகளை முன்வைத்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. என்பன வாய்மொழி மூலம் தமது யோசனைகளை முன்வைக்கவுள்ளன. எமது தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எழுத்து மூலம் யோசனைகளை முன்வைத்துள்ளன. ஜாதிக ஹெல உறுமயவும் முன்வைப்பதாக அறிவித்திருக்கிறது. ஆனால்ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொது எதிரணியும் இதுவரை யோசனைகளை முன்வைக்கவில்லை.
சுதந்திரக் கட்சி சார்பில் இந்தக் குழுவில் பங்குபற்றும் அமைச்சர் நிமல் சிறிபாலவிடம் கேட்டால் அது தொடர்பில் ஆராய குழு நியமிக்கப்பட்டதாக கூறுகிறார். ஆனால் இதுவரை யோசனைகள் முன்வைக்கப்படவில்லை. இது இழுத்தடிப்பா என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது. இந்த இழுத்தடிப்பை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. எனவே இந்த விடயம் குறித்தும் ஜனாதிபதியிடம் ஒரு முடிவை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.
Post a Comment