சிங்கள இலக்கியம் மூலம், சமய பணிபுரியும் ஸெனீபா
சிங்களத்தில்: சகீப் ஷாம் (தன்வீரி) தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்.
பிரபல சிறுகதை, நாவல் இலக்கிய எழுத்தாளரான ஸெனீபா ஸனீர் தேசிய சர்வதேச விருதுகள் பெற்ற ஒரு படைப்பிலக்கிய கர்த்தாவாகக் திகழ்கிறார். சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஆக்க இலக்கியங்கள் படைத்து வரும் இவர், எந்தவொரு சம்பவத்துக்கும் புதுமெருகேற்றி, அதற்கு இஸ்லாமியப் கோட்பாடுகளையும் புகுத்தி சுவைபட வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர். இவரது மொழி வளத்தால் வாசகர்கள் கவர்ந்து ஈர்க்கப்படுகிறார்கள். சிங்கள மொழி ஊடாக இஸ்லாமியப் படைப்பிலக்கியங்களை உருவாக்குவதில் தன்னை அர்ப்பணித்து வருகிறார். மிகவும் அபரிமிதமான பொறுப்புணர்வுடன் சிரமங்களையும் பொருட்படுத்திக் கொண்டு, இஸ்லாமிய விழுமியங்களைப் பிரதிபலிக்கும் நாவல், சிறு கதைகளை ஊடகங்கள் ஊடாக சிங்கள வாசகர்களுக்கு வழங்கி வருகிறார். இவருடன் சிங்கள மொழியில் மேற்கொள்ளப்பட்ட செவ்வியின் தமிழாக்கம் இங்கு தரப்படுகிறது.
கே: நீங்கள் ஓர் எழுத்தாளர் என்ற வகையில், இஸ்லாமிய இலக்கியம் தொடர்பாக அதிக கரிசனை காட்டிவருவதன் பின்னணி என்ன?
சிறு பராயத்திலிருந்தே எனக்கு எழுத்தார்வம் இருந்து வந்துள்ளது. எனது 16 ஆவது வயதிலே முதலாவது நாவலை வெளிக்கொணர்ந்தேன். அதனைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக நான்கு நாவல்களை எழுதியுள்ளேன். அவையெல்லாம் சிறுபிள்ளை விளைத்த வேளாண்மையாகவே இப்போது நான் கருதுகிறேன். தொடர்ந்து நூல்கள் வாசிப்பதன் மூலம் என்னை வளர்த்துக் கொண்டேன். ஆனால் எனது இளமைக் காலங்களில் வாசித்த எந்தவொரு நூலிலாவது முஸ்லிம் சான்றுகள் எதனையும் கண்டு கொள்ள முடியவில்லை. சற்று வயதேறிய பின்னர்தான் முஸ்லிம் நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நூல்களை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
சிங்கள மொழி வாசகர்கள் மத்தியிலே இத்தகைய நூல்கள் பிரபல்யம் பெற்றிருந்தன. முஸ்லிமல்லாத எனது தோழிகள் மேற்படி நூல்களைக் கொண்டு வந்து என்னிடம் கருத்துகளைக் கேட்கத் தலைப்பட்டனர். நான் முஸ்லிம் பாடசாலையில் கற்றபோதிலும் இஸ்லாம் சமயம் குறித்த போதிய சிந்தனை என்னிடம் இருக்கவில்லை. பிரபோதய மாதாந்த சஞ்சிகையைப் படித்ததன் மூலம் சில விடயங்கள் குறித்து தெளிவைப் பெற்றுக் கொண்டேன். பரீட்சையில் தேர்ச்சி பெறுவதற்கே சமய அறிவுகளைத் திரட்டிப் பெற்றுக் கொண்டேன். இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறியென்ற தெளிவு அப்போது என் மனதில் தோன்றவில்லை.
பெண் மஹ்மூதியின் ‘தெவியன்கே அடயவிய’ (Not without my daughter) ‘காந்தாரயே குசும’ (Desert flower) ஆகிய நூல்களைப் படித்த பின்னர், அவை ஒருவரின் அனுபவத்தின் வெளிப்பாடு அல்லது சமூகமொன்றின் சடங்கு, சம்பிரதாயம் அன்றி, இஸ்லாமிய சட்ட திட்டங்கள் அல்ல என்ற எண்ணமே என் மனதில் தோன்றின. பரப்பப்பட்டு வரும் இந்த தவறான கருத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்று எண்ணலானேன். எனக்கு குறிப்பிட்டளவு அறிவு இருந்ததனால் அவ்வாறு கால் பதிக்கவும் விரும்பவில்லை. நூலாக்கம் செய்வதில் உண்மையிலேயே அச்ச உணர்வே ஏற்பட்டது.
இஸ்லாம் சம்பந்தப்பட்ட முஸ்லிம்களது நல்ல பழக்க வழக்கங்கள் அடங்கிய நூலொன்றை யாராவது எழுதுவார்கள் என்றே நான் நினைத்தேன். அதனால் அதனைப் பற்றி நான் எழுதவில்லை. அத்துடன் பிற சமூகம் குறித்து எழுதும் போது தன்னையறியாமலே தவறுகள் நிகழ இடமுண்டு. எம்மால் எழுதப்படும் அனைத்து விடயங்களுக்கும் இந்த உலகத்திலும் மறுமையிலும் பதில் சொல்லியாக வேண்டும் என்ற அச்சம் எனக்கிருந்தது. இத்தகைய காரணங்களினால் நான் எழுத்துலகிலிருந்து சில வருடங்கள் தூரமாகியேயிருந்தேன்.
கே:ஆன்மீகப் பண்பை வளர்க்கும் வகையில் தானே மீண்டும் இலக்கிய உலகில் கால் பதித்தீர்கள்?
ஆம் அப்படித்தான். ஆன்மீகத்தை மையமாக வைத்தே இலக்கியம் படைக்கலானேன். எந்த ஊர், பெயரையும் பயன்படுத்தாது பிறந்த குழந்தையொன்று தன் கண்களால் உலகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் நூலை எழுதினேன். உலகம் தானாக உருவாகவில்லை என்ற கருத்தை அதில் பிரதிபலிக்கச் செய்தேன். பின்னர் 2007 ஆம் ஆண்டில் இஸ்லாத்தின் சிறப்புகளை வெளிக்கொணரக்கூடிய படைப்புகளை ஆக்க வேண்டும் என்ற உணர்வு துளிர்விட்டது.
கே:உங்கள் ஆக்கங்களினூடாக சிறந்த வாசகர் வட்டமொன்று உருவாக்கம் பெற்றிருக்கின்றதா?
உண்மையிலேயே எனது நூல்களைப் படித்தோர் மத்தியில் சிந்தனைத் தெளிவொன்று உருவாக்கப் பெற்றிருப்பதை என்னால் உணர முடிகிறது. ‘புதின்ன இடதென்ன’ ஆன்மீகத்துக்கு வழிவிடுங்கள். நூல் ஊடாக பிறந்த குழந்தைக்கும் வாழும் உரிமை உண்டு என்ற தகவலை சமூகத்தின்முன் கொண்டு சென்றிருக்கிறேன். இந்நூலின் வாசகர்கள் உள்ளங்களில் எனது கருத்துகள் தாக்கம் செலுத்தியதைக் கண்டேன். கருச் சிதைவு செய்வது பாவமான காரியம் என்பதை ஏற்றுக்கொண்டனர். இந்நூலை வாசித்த தாதியொருவர் யதார்த்த பூர்வமான விடயங்களை இந்நூல் வெளிப்படுத்தியுள்ளதாக கருச்சிதைவுப் பணிகளில் ஈடுபட்ட தனது அனுபவ உண்மைகளை முன்னிறுத்தி எனது நூலை அங்கீகரித்தார்.
எனது மற்றொரு படைப்பான ‘டியர் டயரி’ சிறுகதையை வாசித்த இந்தியாவைச் சேர்ந்த பொறியியல்துறை மாணவர் ஒருவர், இக்கதை மூலம் அவர் அடைந்த மனமாற்றம் பற்றி நீண்ட கடிதமொன்றை எனக்கு அனுப்பியிருந்தார். அவர் இக்கதையைப் படிக்கும் வரை முஸ்லிம்களின் வாழ்க்கை முறை பற்றித் தெரியாத நிலையில் அதற்கெதிரான சிந்தனையுடன் இருந்ததாகவும் அவரது குடும்பத்தினருடன் வைராக்கிய மனப்பான்மையுடனே காலம் கடத்தியதாகவும் தனது தவறான வழிமுறைக் குறித்து கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட எனது ஆக்கம் தற்செயலாக கிடைக்கப்பெற்று வாசித்ததாகவும் வாசித்த பின்னர் அன்றிரவு முழுவதும் அழுது பிராயச்சித்தம் தேடியதாகவும் தனது உள்ளக்கிடக்கையை வெளியிட்டிருந்தார். இப்போது அவர் இஸ்லாமிய நெறி முறைக்கிணங்க வாழ்வதோடு, அவரது குடும்ப வாழ்வும் மிகவும் திருப்தியான முறையில் நடந்தேறுவதாகவும் தனது திருந்திய நிலைப்பாட்டையும் குறிப்பிட்டிருந்தார்.
May Allah bless you sister
ReplyDeleteMay Allah bless you sister
ReplyDeleteபணி தொடரட்டும்.
ReplyDelete