Header Ads



ஹஜ் நிறைவேற்ற கட்டாருக்கு, தனி விமானம் அனுப்புகிறார் சல்மான்

ஹஜ் கடமையில் ஈடுபடும் கட்டார் பிரஜைகள் மின்னணு அனுமதிகள் இன்றி வருவதற்காக சல்வா எல்லை கடவை திறந்து விடப்படும் என்று சவூதியின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனத்தின் அறிவிப்பொன்று குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தனது செலவில் ஹஜ் கடமையை நிறைவேற்றும்படி சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ் காட்டார் யாத்திரிகர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் அந்த அறிவிப்பு கூறியுள்ளது.

கட்டார் யாத்திரிகர்கள் அனைவரையும் அழைத்து வர தனது தனிப்பட்ட செலவில் சவூதி ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்றை டோஹா விமானநிலையத்திற்கு அனுப்பும்படியும் சவூதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

கட்டார் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடனான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை சவூதி, எகிப்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் துண்டித்தது தொடக்கம் சல்வா எல்லைக் கடவை மூடப்பட்ட நிலையில் உள்ளது.

மக்கா மற்றும் மதீனாவுக்கு வரும் யாத்திரிகர்களின் மையமாக ஜித்தாஹ் விமானநிலையம் இருந்து வருகிறது.

அதேபோன்று மன்னர் பஹத் விமான நிலையம் மற்றும் நாட்டின் கிழக்கில் உள்ள இஹ்சா விமான நிலையத்தில் இருந்து கட்டார் பிரஜைகளுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்கவும் மன்னரின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவூதியின் இந்த அறிவிப்பு குறித்து கட்டார் அரசு நேற்று வரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

இம்முறை ஹஜ் கடமையில் பங்கேற்கும் கட்டார் யாத்திரிகர்களுக்கு சவூதி அரசு கடந்த மாதம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

குறிப்பாக சவூதி அங்கீகரிக்கு விமான சேவை ஒன்றின் உடாகவே நாட்டுக்கு வர வேண்டும் என்று சவூதி கூறியது.

இதனைத் தொடர்ந்து சவூதி ஹஜ்ஜை அரசியலாக்குவதாக கட்டார் குற்றம்சாட்டி இருந்தது. 

No comments

Powered by Blogger.