Header Ads



மார்பகங்களில், கவனம் இருக்கட்டும்..!

மார்பகங்களில் ஏதேனும் கட்டியோ வீக்கமோ வந்தால் மட்டுமே பல பெண்களுக்கும் பயம் ஏற்படும். மருத்துவப் பரிசோதனையைப் பற்றியே யோசிப்பார்கள். மார்பகங்களில் ஏற்படுகிற சின்னச்சின்ன மாற்றங்களையும், அசௌகரியங்களையும் அலட்சியப்படுத்தாமல் உடனே கவனிப்பதும், தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனைகள் பெறுவதும் ஆரோக்கியத்தை மட்டுமின்றி ஆயுளையும் காக்கும் என்கிறார் மருத்துவர் நிவேதிதா. அதற்கான சில ஆலோசனைகளையும் முன்வைக்கிறார் அவர்.

மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பாக பெரும்பாலான பெண்களுக்கு மார்பங்களில் கனத்த உணர்வும், வலியும் இருக்கும். இதற்கு அவர்களது உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களே காரணம். மாதவிடாய் முடிகிறபோது இந்த உணர்வும் தானாக மறைந்துவிடும். இந்த அவதியிலிருந்து விடுபட கீழ்க்கண்ட விஷயங்கள் உதவும்.

* மாதவிடாய் ஆரம்பிக்கும் முன்பே உணவில் உப்பின் அளவைக் குறைத்துவிடுங்கள். உப்பு அதிகமுள்ள ஊறுகாய், சிப்ஸ், சாஸ் போன்றவற்றை அறவே தவிர்த்துவிடுங்கள்.

* மருத்துவரின் ஆலோசனை பெற்று தினமும் 400 கிராம் மக்னீசியம் மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் மருத்துவரிடம் கேட்டு வைட்டமின் இ மாத்திரையையும் எடுத்துக் கொள்ளலாம்.

* கஃபைன் அதிகமுள்ள காபி, கோலா பானங்களைக் குறைக்கவும் அல்லது தவிர்க்கவும்.

* சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு வலியும், வீக்கமும் இம்சை கொடுக்கும்போது வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

* மெனோபாஸ் காலத்தை எட்டிவிட்ட பிறகு பெரும்பாலும் பெண்களுக்கு இந்த அவதி தொடர்வதில்லை. ஆனாலும் சில பெண்களுக்கு மன அழுத்தம், ஈஸ்ட்ரோஜென் தெரபி, குறிப்பிட்ட சில மருந்துகள் எடுத்துக்கொள்வது போன்றவை மார்பக வலியை அதிகரிக்கலாம்.

* மார்பகங்களில் ஏற்படுகிற வலி என்பது எப்போதுமே மாதவிடாய் தொடர்புடையதாகவே இருக்கும் என அர்த்தமில்லை. மிகவும் கடுமையான அல்லது குத்துவது போன்ற வலி வேறு ஏதேனும் பிரச்னையின் அறிகுறியாகவும் இருக்கலாம். இதுபோன்ற வலியானது மார்பகத்தின் ஒரு பக்கத்தில் ஏற்பட்டு, அக்குள் பகுதி வரை பரவும். ஒரு பக்கத்தில் இருக்கும் வலி, அதிலும் குறையாத வலி இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் காட்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும்.

* 30 முதல் 50 வயது வரையுள்ள பெண்களுக்கு மார்பகங்களில் ஆங்காங்கே வீக்கம் தென்படுவது சகஜமானதே. ஏற்கனவே குறிப்பிட்டது போல மாதவிடாய்க்கு முன்பும், தாய்ப்பால் ஊட்டும் காலத்திலும் இது போன்ற வீக்கங்கள் இருக்கலாம். ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வோருக்கும் வரலாம்.

* எல்லா வீக்கங்களுமே மார்பகப் புற்றுநோய் கட்டிகளாக இருக்க வேண்டும் என்று பயப்பட வேண்டியதில்லை. அப்படியும் சந்தேகம் ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் அது வெறும் வீக்கமா அல்லது புற்றுநோயின் அறிகுறியா எனத் தெளிவு பெறலாம்.

* கட்டிகள் நாளுக்கு நாள் பெரிதானாலோ. மார்பங்களின் வடிவில் மாற்றம்  தெரிந்தாலோ, கசிவுகள் தென்பட்டாலோ, சிவந்து போனாலோ, தாய்ப்பால் கொடுக்க  முடியாத அளவுக்கு வலியும், வீக்கமும் மிகவும் அதிகமானாலோ உடனடியாக  மருத்துவரை அணுக வேண்டும்.

மார்பகங்களில் வலியும் வீக்கமும் அதிகமிருந்தால்...

10 முதல் 15 நிமிடங்களுக்கு மார்பகங்களுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். மார்பகங்களை உறுத்தாத உள்ளாடை அவசியம். மார்பகங்களில் வலி இருக்கும் காரணத்துக்காக தாய்ப்பால் ஊட்டுவதைத் தவிர்க்கக்கூடாது. தாய்ப்பால் கொடுக்கக் கொடுக்க வலியும், வீக்கமும் குறையும்.

No comments

Powered by Blogger.