Header Ads



ஞானசாரரை மிஞ்சும், சுமனரத்ன..!

மீராவோடை பாடசாலை காணி விவகாரத்தில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே முரண்பாடு நிலவி வருகிறது. இந்ந முரண்பாட்டை தனக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்திய மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் கண்டிக்கத்தக்க வார்த்தை பிரயோகத்தை கையாண்டிருந்தார். இப்படியான கீழ்த்தரமான வார்த்தை பிரயோகத்தை ஞானசார தேரர் கூட பாவித்திருக்கவில்லை எனக் கூறினாலும் தவறாகாது.

குறித்த தேரர் ஞானசார தேரரின் நெருங்கிய சகாவாகும் என்பது யாவருக்கும் தெரியும். ஞானசார தேரர் அடக்கப்பட்டிருந்தாலும் அவரின் மூலம் நிகழ்த்தப்பட்ட இன வாத நிகழ்ச்சி நிரல்கள் டான் பிரசாத் மற்றும் இவ்வாறான தேரர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இதனை இவ்வரசு கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கின்றது.

இது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதில் இவர் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியமில்லை. அல்லது இவருக்கு அனைத்து பிரச்சினைகளின் போதும் தலையிட்டு தீர்வை பெற்றுக்கொடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வரசு மறைமுகமாக இவ் அதிகாரத்தை வழங்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந் நாட்டின் அதிகாரம் பௌத்த அடிப்படைவாதிகளின் கைகளில் படிப்படியாக சென்று கொண்டிருப்பதை இதனூடாக அறிந்துகொள்ளலாம்.

குறித்த தேரர் பிரச்சினை எழுந்த இடத்தில் நீதி மன்ற உத்தரவை கிழித்து வீசியிருந்தார். இதற்கு முன்பும் ஒரு தடவை அவர் நீதி மன்ற உத்தரவை கிழித்து வீசியிருந்தார். பௌத்த தேரர்களுக்கு நீதி மன்ற உத்தரவை கிழித்தெறியும் வகையிலான சட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்ற அச்சம் எழுகிறது. இவரின் செயற்பாடானது இலங்கை நீதிதுறையின் செயற்பாட்டை பலவீனப்படுத்துகிறது. இதுவெல்லாம் இலங்கை நாட்டுக்கு சிறந்ததல்ல.

அ அஹமட்-

1 comment:

  1. பாடசாலை காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளவர்கள் பாடசாலை கல்வி யை தடுக்கிறார்கள்.

    இவ்வளவு காலமும் ஏன் இவர்களை வெளியேற்றவும் இல்லை, தண்டணையும் இல்லை.

    அது எப்படி இந்த காணி கொள்ளை செய்யும் போது தமிழ்-முஸ்லிம் இன ஒற்றுமை" வளரும், ஆனால்
    இப்போ ஒரு புத்த மத குரு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக நியாயம் கேட்டவுடன் இன ஒற்றமை தேய்யும்?




    ReplyDelete

Powered by Blogger.