பஸ்ஸின் அடியில் உறங்கிய இருவர், சில்லில் சிக்கி மரணம்
கிளிநொச்சியிலிருந்து கதிர்காம யாத்திரைக்காக வந்த பஸ்ஸில் சிக்கி இருவர் மரணமடைந்துள்ளனர்.
நேற்று (07) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், கிளிநொச்சியைச் சேர்ந்த யோவான் (35) மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நிதர்ஷன் (18) ஆகிய இருவரே மணமடைந்துள்ளனர்.
குறித்த இருவரும் கதிர்காம எசல பெரஹராவை பார்வையிட வந்துள்ள நிலையில் நேற்று (08) இரவு, கதிர்காமம் ரஞ்சித் மத்தும பண்டார மைதானத்தில் தரித்து நின்ற தாங்கள் வந்த பஸ்ஸின் பின்புறமாக அதன் அடியில் தூங்கியுள்ளனர்.
இரவு 11.00 மணியளவில் பஸ்ஸிற்குள் வந்த சாரதி, குறித்த பஸ்ஸை பின்புறமாக செலுத்த முற்பட்ட வேளையில் அதற்கடியிலிருந்த இருவரும் பஸ்ஸின் சில்லுக்குள் சிக்கிய நிலையில் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அவர்களுடன் உறங்கிய மேலும் இருவர் உயிருக்காக போராடியுள்ளனர். இதனையடுத்து குறித்த இருவரும் மீட்கப்பட்டு, ஒருவர் கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலைக்கும் மற்றையவர் அங்கிருந்து ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களாவர் என்பதோடு, மரணமடைந்தவர்களின் சடலம் தற்போது கதிர்காமம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment