இலங்கையிலிருக்கும். மியன்மார் அகதிகள், தனி வீட்டுக்கு மாற்றம்
-ARA.Fareel-
மிரிஹான பொலிஸ் நிலைய விஷேட தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மியன்மார் முஸ்லிம் அகதிகள் தடுப்பு முகாமிலிருந்தும் அகற்றப்பட்டு கல்கிஸையில் தனியான வீடொன்றுக்கு இடம் மாற்றப்படவுள்ளனர்.
மிரிஹான பொலிஸ் நிலைய விஷேட தடுப்பு முகாமில் மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கு இடம் பற்றாக்குறை நிலவுவதாக பொலிஸார் தெரிவித்து வந்த நிலையில் அவர்கள் அங்கிருந்தும் இடம் மாற்றப்படவுள்ளனர் என மியன்மார் அகதிகள் விவகார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
தடுப்பு முகாமிலிருந்தும் அகதிகளை இடம் மாற்றுவதற்கு வெளிவிவகார அமைச்சு, குடிவரவு –குடியகல்வு திணைக்களம், மிரிஹான பொலிஸார், யு.என்.எச்.சி.ஆர் நிறுவனம் என்பன அனுமதி வழங்கியுள்ளதாகவும் அசாத் சாலி தெரிவித்தார்.
மியன்மார் அகதிகளை வேறோர் இடத்துக்கு இடம்மாற்றுவதற்கு நீதிமன்றின் உத்தரவினைப் பெற்றுக்கொள்ளபட வேண்டியுள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி அகதிகள் காங்கேசன்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
இந்நிலையில் 17 ஆம் திகதிக்கு முன்பு மியன்மார் அகதிகளை இடம் மாற்றுவதற்கான உத்தரவினைப் பெற்றுக்கொள்வதாக அசாத்சாலி தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் பயணித்த போது படகு கோளாறுக்குள்ளாகி இலங்கையின் வடக்கு கடல் எல்லையில் கைது செய்யப்பட்டனர். பின்பு அவர்கள் காங்கேசன்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 7 ஆண்கள் 7 பெண்கள் மற்றும் 16 பிள்ளைகள் அடங்குகின்றனர்.
Post a Comment