பாரிய பொறுப்பு, லத்தீபிடம் ஒப்படைப்பு
-MFM.Fazeer-
பொலிஸ் விஷேட அதிரடிப் படை யின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீபிடம், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை தேசிய பொலிஸ் ஆணைக்குழு வழங்கியுள்ளதுடன் அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி பதவிக்கு மேலதிகமாக குற்றத் தடுப்பு மற்றும் போதைப் பொருள் கடத்தலை தடுத்தல் ஆகிய இரு பிரதான விடயங்களின் கீழ்வரும் நடவடிக்கைகள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீபின் கீழ் முன்னெடுக்கப் படவுள்ளன.
திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்த புதிய பொறுப்புகள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீபிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றுமுதல் அது தொடர்பில் சிறப்பு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் 24 மணிநேர மத்திய நிலையம் ஒன்று பொலிஸ் விஷேட அதிரடிப் படைத் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய நிலையத்துக்கு தகவல் வழங்குவோருக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளதுடன் அவர்களது அடையாளம் இரகசியமாக கருதி பாதுகாக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அதன்படி திட்டமிட்ட குற்றங்கள், போதைப் பொருள் தடுப்பு தொடர்பில் தகவல்களை 011 2580518, 011 - 2058552, 011 2081040 என்கின்ற குறித்த மத்திய நிலைய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனைவிட 011 2081044, 011 2588499 என்கின்ற தொலைநகல் இலக்கங்கள் ஊடாகவும் ctrcolombo@gmail.com, stfhqopsroom@gmail.com எனும் மின்னஞ்சல் ஊடாகவும் தகவல் அளிக்க முடியும் என பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் குற்றங்கள் தொடர்பில் செயற்படும் சிறப்பு படைப் பிரிவு, பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதியின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து அது தொடர்பில் எதிர்காலத்தில் பாரிய முன்னேற்றங்களைக் காணக்கூடியதாக இருக்கும் என சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக இதுவரை பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் குற்றவாளிகளைக் கைது செய்யும்போதும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. எனினும் தற்போது திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகியன விஷேட அதிரடிப்படை கட்டளைத் தளபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment