மொஹமத் பின் சல்மான் மேற்பார்வையில், சுற்றுலாவை மேம்படுத்த சவுதி முயற்சி
ஐம்பது தீவுகள் மற்றும் செங்கடலில் உள்ள பிற பகுதிகளை ஆடம்பர விடுதிகளாக மாற்றும் மாபெரும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தினை செளதி அரேபியா தொடங்கியுள்ளது.
எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால் நாட்டின் பொருளாதாரத்தை பரவலாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இத்திட்டத்தின் முலம் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளையும் உள்நாட்டுப் பார்வையாளர்களையும் ஈர்க்க முடியும் என செளதி நம்புகிறது.
மது, திரைப்படம் மற்றும் திரையரங்குகள் ஆகியவை செளதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
புதிய ஆடம்ப விடுதிக்கான கட்டுமான பணிகள் 2019-ல் தொடங்கப்பட உள்ளது. ஒரு புதிய விமான நிலையம், ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் வீடுகள் ஆகியவை முதல் கட்ட பணிகளில் இடம்பெற்றுள்ளன. இத்திட்டம் 2022-ம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால், வருவாயைப் பெருக்கும் புதிய வழிகளை உருவாக்குவது மற்றும் செளதி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது ஆகியவை உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
கடந்த ஜூன் மாதம், செளதி அரேபியாவின் அடுத்த ஆட்சியாளராக வரும் வரிசையில் முதலாம் இடத்திற்கு உயர்ந்த இளவரசர் மொஹமத் பின் சல்மான் மேற்பார்வையில் தொலைநோக்கு திட்டம் (விஷன்) 2030 நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலாத் துறையும் இந்த 2030 திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
செளதி மேற்கு கடற்கரையில் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு, செங்கடல் வளர்ச்சி திட்டம் கட்டமைக்கப்பட உள்ளது என தொலைநோக்கு திட்டம் 2030 கூறுகிறது.
பவளப் பாறைகள், செயலற்ற எரிமலைகள், அரேபிய சிறுத்தைப்புலிகள் போன்ற அரிய வனவிலங்குகள் போன்றவற்றை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய அம்சங்களாக உள்ளன.
உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோவால் வகைப்படுத்தப்பட்டுள்ள மதெய்ன் சாலே பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் பயணம் மேற்கொள்ளலாம். பாராசூட், மலையேற்றம் போன்றவற்றையும் அனுபவிக்கலாம்.
BBC
BBC
Post a Comment