இலங்கை கிரிக்கெட்டில், மாபியாதான் இருக்கின்றது
“ஒரு தேசம் என்று வந்துவிட்டால் ஜனநாயகம் இருக்கவேண்டும். ஆனால் இலங்கை கிரிக்கெட்டில் ஒருநாளும் ஜனநாயகம் இருந்ததில்லை. கிரிக்கெட்டில் எப்போதும் மாபியா ஒன்றுதான் இருந்தது.
உலகக் கிண்ண வெற்றியின் பின்னர் சூதாட்டக்காரர்கள் இதற்குள் புகுந்து அனைத்தையும் நாசமாக்கிவிட்டார்கள். அதன் பின்னர்தான் எல்லோரும் பணத்தில் புரள ஆரம்பித்தனர்.
அக் காலத்தில் கிரிக்கெட் நிருவாகத்திற்கு எவரும் வரமாட்டார்கள். ஐந்து பேரைக்கூடத் தேட முடியாது. பணத்தைக் கண்டதும் யார் யாரெல்லாமோ புகுந்துவிட்டார்கள். இப்போது இருப்பவர்கள் அப்படிப்பட்டவர்கள்தான் என பெற்றோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தற்போதைய கிரிக்கெட் நிலை குறித்த கவலை வெளியிட்டுள்ளார்.
பெற்றோலிய அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோதே உலகக் கிண்ண வெற்றி அணித் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார்.
தற்போதைய கிரிக்கெட் நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தி அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதன் பிரதியை பிரதமருக்கும் கையளித்துள்ளதாகவும் அத்துடன் இந்தக் கடிதத்தின் பிரதியை சகல ஊடகங்களுக்கும் வழங்குவேன் எனவும் அவர்கள் இருவரிடமும் கூறியதாகவும் தெரிவித்தார்.
‘‘நாங்கள் அரசாங்கம் அமைத்த பின்னர் கிரிக்கெட் வீழ்ச்சியடைந்துள்ளமை குறித்து நான் ஒன்றுமே பேசாமல் இருக்கின்றேன் என என்மீது குறை கூறுவார்கள். அதனால் தான் இந்தக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளேன். நான் சொல்லும் விடயங்களுக்கு செவிமடுக்க வேண்டியவர்கள் மௌனமாக இருப்பதாலேயே கடைசியாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவருக்கும் அறிவிக்க வேண்டும் என்ற எனது கடமையின் அடிப்படையில் இந்த கடிதத்தை நான் ஒப்படைத்தேன்’’ என்றார்.
‘‘தற்போது நிருவாகிகளாக இருப்பவர்கள் தகுதியற்றவர்கள் என்பதை நிருவாகிகள் தெரிவுக்கான தேர்தலில் போட்டியிட முன்வந்தபோது விளையாட்டுத்துறை அமைச்சரிடம் தெளிவாக எடுத்துக்கூறினோம். நானும் சாட்சியாளராக சென்று எல்லாவிடயங்களையும் தெட்டத்தெளிவாக எடுத்துக்கூறினேன்.
அத்துடன் மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்தகாலத்தில் சட்ட நிபுணர் ஒருவர் தயாரித்த அறிக்கையையும் கையளித்தோம். எனவே, விளையாட்டுத்துறை சட்டத்தின் பிரகாரம் குறிப்பிட்ட நிருவாகிகள் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர்கள் என்பதை தெளிவுபடுத்தினோம். அதற்கமைய முதுகெலும்புடன் நேர்மையாக செயற்படக்கூடிய தைரியம் இருக்கவேண்டும்’’ என அவர் சுட்டிக்காட்டினார்.
‘‘முன்னர் கிரிக்கெட் விளையாட்டு மோசமான நிலைக்கு சென்றபோது அப்போது விளையாட்டுத்துறை அமைச்சர்களாக இருந்த எஸ். பி. திசாநாயக்க, லக் ஷமன் கிரியெல்ல, ஜீவன் குமாரதுங்க ஆகிய மூவரும் சுமதிபாலவை நீக்கிவிட்டு இடைக்கால நிருவாகத்தை ஏற்படுத்தினர். நாங்கள் கடந்த தேர்தலின்போது தகுதி இன்மைக்கான மூன்று காரணங்களை எடுத்துக்கூறினோம்.
சட்ட நூலிலும் இது இருக்கின்றது. சூதாட்டத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புபட்டவர்கள், விளையாட்டுத்துறை உபகரணங்களைத் தருவிப்பவர்கள் அல்லது விற்பனை செய்பவர்கள், ஊடகத்துறையில் இருப்பவர்கள் ஆகியோர் கிரிக்கெட் நிருவாக உத்தியோகத்தர் பதவிகளுக்கு போட்டியிட முடியாது என அந்த சட்டநூலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவற்றை புதிய அமைச்சர் நீக்கிவிட்டாரோ தெரியவில்லை. இவை அனைத்தும் சட்டத்தை மீறுபவனவா என்பதை ஊடகங்கள் அறியும். இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தேன். அதன் பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையிலும் விசாரணைக்கு சென்றோம்.
இன்றுவரை அறிக்கை இல்லை. அதற்காக நான் அமைச்சராக இருந்துகொண்டு யாரையும் வற்புறுத்த முடியாது. நான் எனது கடமைகளை செய்துவிட்டு ஒதுங்கியிருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றேன். இவ்வாறான விடயங்கள் தொடரக்கூடாது என்பதாலேயே நாட்டின் முதல் மனிதர்கள் இருவருக்கும் இந்த விடயங்களை எழுத்து மூலம் அறிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டேன்’’ எனவும் அர்ஜுன கூறினார்.
‘‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அதற்கும் அப்பால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கோ கிரிக்கெட் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாது. ஆனால் சுமதிபால எந்நாளும் வெற்றி பெறுபவர். அதுதான் கிரிக்கெட் மாபியா என்பது. இதனை விளையாட்டுத்துறை அமைச்சரால் புரிந்துகொள்ளமுடியாவிட்டால், ஏதோ பிரச்சினை இருக்கின்றது. இது குறித்து நாட்டு மக்கள் எப்போதாவது தகுந்த பதிலளிப்பர். எனவே இப்போதுள்ள சூழ்நிலையில் இடைக்கால நிருவாக சபையை அமைப்பதே உசிதமானது. அதுவும் சரியானவர்களிடம் இந்த நிருவாகம் ஒப்படைக்கப்படவேண்டும்’’ என அர்ஜுன தெரிவித்தார்.
இலங்கையில் இடைக்கால கிரிக்கெட் நிருவாக சபை நியமிக்கப்பட்டால் ஐ.சி.சியின் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும் என விளையாட்டுத்துறை அமைச்சர் கூறுகின்றார். ஆனால் இந்தியாவில் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் நிருவாக சபை இயங்குகின்றது. அப்படி இருக்கும் போது இங்கு இடைக்கால கிரிக்கெட் சபையை நியமிக்க முடியாதா என மெட்ரோ ஸ்போர்ட்ஸ் வினவியதற்கு, ‘‘இடைக்கால நிருவாக சபையை நியமிக்காவிட்டால் கிரிக்கெட் இன்னும் மோசமடைந்துவிடும். சரியானவர்களை நியமித்து இதனை நடத்தவேண்டும். விளையாட்டுத்துறை அமைச்சர் சாக்குப்போக்குக்காக அப்படி கூறுகின்றார். எமது நாட்டில் 8 வருடங்கள் இடைக்கால நிருவாக சபை இருந்தது.
நானும் 10 மாதங்கள் இடைக்கால நிருவாக சபையில் இருந்தேன். தேர்தல் நடத்துமாறு எங்களிடம் ஐ.சி.சி. கோரியது. தேர்தல் நடத்தினால் சூதாட்டக்காரர்கள் வந்து விடுவார்கள் என தெளிவுபடுத்தியபோது அவர்கள் சிரித்து விட்டு இடைக்கால சபையை செயற்பட அனுமதித்தனர். ஊடகப் பேச்சாளரானால் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவது இலகுவானது.
அவர் நியாயமாக பேச வேண்டும். அல்லது இப்படி ஒரு பிரச்சினை இருக்கின்றது என ஐ.சி.சியிடம் சென்று கலந்துரையாடவேண்டும். ஆனால் எஸ். பி. திசாநாயக்க, லக் ஷமன் கிரியெல்ல, ஜீவன் குமாரதுங்க ஆகிய மூன்று அமைச்சர்களும் ஐ.சி.சியிடம் செல்லவில்லை. இந்த மூவருமே தகுதியில்லாதவர்களை நீக்கினார்கள். அதன் பின்னர் இடைக்கால நிருவாக சபை நியமிக்கப்பட்டு வருடக்கணக்காக இயங்கியது. சிலர் தகுதியற்ற தங்களது நண்பர்களைக் காப்பாற்ற முயற்சிப்பதுதான் உண்மை. அது தான் கசக்கும் உண்மை.
அரசாங்கத்தில் அங்கம் வகித்த இரண்டு அமைச்சர்களில் ஒருவர் இராஜினாமா செய்ததுடன் இன்னுமொருவரை ஜனாதிபதி நீக்கினார். அப்படி இருக்கும்போது கிரிக்கெட் நிருவாகத்தையும் அவரால் கலைக்க முடியுமல்லவா என மெட்ரோ ஸ்போர்ட்ஸ் மீண்டும் வினவியபோது, ‘‘பொறுத்திருப்போம். இப்போதுதானே நாங்கள் கடிதம் சமர்ப்பித்துள்ளோம். நான் ஒரு விடயத்தை சொல்வதானால் என்னைத் தவறாக கருதவேண்டாம்.
ஒருகாலத்தில் சமயத்தை விட கிரிக்கெட் பெரிதாக இருந்தது. கிரிக்கெட்தான் சகல இனத்தையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வரக்கூடியதாக இருந்தது. 1996 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது எல்.ரீ.ரீ.ஈ.யும் யுத்தத்தை நிறுத்தியது என்பதை என்னால் நினைவுகூரமுடியும். இப்போது கிரிக்கெட் தலை கீழாகியிருப்பதுற்கு தவறான நிருவாகமே காரணம். இவற்றைத் திருத்த வேண்டும்” என அமைச்சர் அர்ஜுன தெரிவித்தார்.
100%உண்மை.. பழைய நிலைக்கு இலங்கை கிரிக்கெட் அணி திரும்ப வேண்டும்...
ReplyDelete