இலங்கையின் முதலாவது ஹஜ்குழு ஞாயிறு பயணம், பணம் செலுத்தாவிட்டால் இரத்து
-SNM.Suhail-
இலங்கையின் முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு நாளை மறுதினம் ஞாயிறன்று பயணமாகவுள்ளது. கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரவு 9.05 க்கு சவூதி எயார் விமானத்திலேயே முதலாவது யாத்திரிகர்கள் குழு பயணமாகவுள்ளது. இக்குழுவில் 148 யாத்திரிகர்கள் சவூதிக்கு செல்லவுள்ளனர்.
இவர்களை முஸ்லிம் சமய விவகாரம், தபால் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் மற்றும் முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளர், ஹஜ்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு சென்று வழியனுப்பி வைக்கவுள்ளனர்.
சவூதி நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு ஜித்தா விமான நிலையத்தை அடையும் இலங்கை யாத்திரிகர்களை சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் அஸ்மி தாஸிம், பதில் கவுன்ஸிலர் ஜெனரல் எஸ்.எல்.கே. நியாஸ், மொழிபெயர்ப்பு அதிகாரி நளீர் உள்ளிட்டோர் வரவேற்கவுள்ளனர்.
அத்துடன், இரண்டாவது யாத்திரிகர்கள் குழு ஸ்ரீ லங்கன் எயார்லைன் மூலம் மறுநாள் திங்கட்கிழமை 7 ஆம் திகதி 90 பயணிகளுடன் செல்லவுள்ளது. அதே தினத்தில் ஒமான் எயாரில் 29 பேரும் சவூதி எயாரில் 160 பேரும் பயணிக்கவுள்ளனர். 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளிலும் பல விமானங்கள் மூலம் யாத்திரிகர்கள் பயணிக்கவுள்ளனர்.
இதேவேளை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் அடங்கிய ஹஜ் குழு உறுப்பினர்கள் அடங்கிய குழு 10 ஆம் திகதி பயணிக்கவுள்ளனர்.
முதற்கட்டமாக 6 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை பயணிக்கவுள்ளனர். இரண்டாம் கட்ட பயணிகள் 18 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை சவூதிக்கு செல்லவுள்ளனர். இரண்டாம் குழுவுடன் 180 ஆம் திகதி ஹஜ் குழு தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் மலிக், உள்ளிட்டோரும் செல்லவுள்ளனர்.
24 ஆம் திகதி ஹஜ் குழு உறுப்பினர்களான எம்.எச்.ஏ.பாஹிம், சட்டத்தரணி சிராஸ்நூர்தீன் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் பயணிக்கவுள்ளனர். 24 ஆம் திகதிமுதல் 27 ஆம் திகதிவரை மூன்றாம்கட்ட யாத்திரிகர்கள் சவூதிக்கு செல்லவுள்ளனர்.
இதனிடையே முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் எதிர்வரும் 26 ஆம் திகதி சவூதிக்கு செல்லவுள்ளார். அத்துடன் இம்முறை ஹஜ் குழுவில் ஐந்து வைத்தியர்கள் அடங்குகின்றனர்.
2017 ஆம் ஆண்டு ஹஜ் கடமைக்கு இலங்கைக்கு 2840 கோட்டா கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
2
2017 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஏற்பாடுகள் முழுமையாக பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு சில யாத்திரிகர்கள், முகவர்களுக்கு பணத்தை செலுத்தாதிருப்பதனால் அவர்களின் ஹஜ் பயணத்தை ரத்து செய்ய ஹஜ்குழு தீர்மானித்திருப்பதாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் தெரிவித்தார்.
பயணத்துக்காக பணம் செலுத்தாத யாத்திரிகர்கள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் பணத்தை செலுத்த அவகாசம் வழங்கப்படுவதாகவும் அவ்வாறு பணம் செலுத்தாவிடின் ஏற்படும் வெற்றிடத்திற்கு ஹஜ் பயணத்திற்காக காத்திருப்போரை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment