குருநாகல் பள்ளிவாசலில் சிறுநீர், கழித்தும் அட்டூழியம் - குற்றவாளிகளை பிடித்து, தண்டனை வழங்க கோரிக்கை
நாரம்மல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெந்தெனிகொட பிரதேசத்திலுள்ள இரு ஜும்ஆப் பள்ளிவாசல்கள் மீது இனம் தெரியாத நபர்களால் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.00 மணி அளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அத்துடன், இதன்போது, ஒரு பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தும் அசுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
நாரம்மல மடிகே பெந்தனிகொட எனும் முஸ்லிம் கிராமத்தில் அமைந்துள்ள உஸ்வதுல் ஹஸனாத் ஜும்ஆபள்ளியும், மஸ்ஜிதுத்தக்வா தைக்காப்பள்ளியுமே நேற்று முன்தினம் இரவு சுமார் 12 மணியளவில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.
பெந்தெனிகொட உஸ்வத்துல் ஹஸனாத் ஜும்ஆ பள்ளிவாசலின் முன்வாயலுக்கு கல்லால் எறிந்துள்ளமையால் அதன் மேலே உள்ள கண்ணாடி உடைந்துள்ளது. அத்துடன் அதே வாசலில் நின்று சிறுநீரைக் கழித்து விட்டும் சென்றுள்ளனர்.
அக்கரை ஜும்ஆப் பள்ளிவாசலின் யன்னலுக்கு கல்லால் எறிந்துள்ளனர். அதன் கண்ணாடிகள் உடைத்து சேதமாக்கியுள்ளனர்.
சுபஹ் தொழுகைக்காக முஅத்தின் மார்கள் வந்து பார்த்த பின்னரே இந்த தாக்குதல் தொடர்பாக பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இரு பள்ளிவாசல்களினது நிருவாகத்தினரும் நாரம்மல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் உடன் ஸ்தலத்திற்கு வந்துசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக பள்ளிவாசல் (உஸ்வதுல்–ஹஸனாத்) தலைவர் மௌலவி எம்.ஜே.எம்.ஜெஸீம் (பலாஹி) அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,
குருநாகல் மாவட்டத்தின் மிகப் பழைமை வாய்ந்த முஸ்லிம் கிராமங்களில் ஒன்றான எமது மடிகே பெந்தனிகொட கிராமத்தில் சுமார் 325 குடும்பங்கள் வசிக்கின்றன. நாம் பெரும்பான்மை இனத்தவர்களை சூழ வாழ்வதுடன் அவர்களுடன் அந்நியோன்யமாகவே பழகுகிறோம். எமது பெரிய பள்ளிக்கு சூழ இருப்பது முஸ்லிம்களே எனினும் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியின் சூழ முஸ்லிம்களும் பெரும்பான்மை இனத்தவர்களும் வசிக்கின்றனர்.
நேற்று இரவு சுமார் 12 மணியளவில் பள்ளிவாசல் பகுதியில் இருந்து சிறு சப்தம் அயலவர்களுக்கு கேட்டுள்ளது. எனினும் அதனை எவரும் பொருட்படுத்தியிருக்கவில்லை. இப்படியொரு தாக்குதல் எமது பள்ளிக்கு ஏற்படுமென்றுகூட நாம் எண்ணியிருக்கவில்லை.
மிகவும் பழைமையான எமது பள்ளியில் தொழுகைக்கும் இடநெருக்கடியாக இருந்த சந்தர்ப்பத்தில், விரிவுபடுத்தி இரு மாடிகளைக் கொண்ட பள்ளிவாசலாக கட்டி, கடந்த றமழானுக்குத்தான் திறப்பு விழாவையும் வைத்தோம். அந்நிலையில் இந்த தாக்குதலானது மிகவும் கவலைக்குரியதாகும்.
தாக்குதலினால், முன்பகுதியின் கண்ணாடியொன்று நொருங்கியுள்ளதுடன், தக்வா பள்ளியிலும் கண்ணாடியொன்று நொருங்கியுள்ளது அத்துடன் அங்கு பள்ளியின் முன் பகுதியில் சிறுநீரும் கழித்து சென்றுள்ளனர்.
நாரம்மல பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளோம்.
தொடர்ந்தும் பொலிஸார் மற்றும் உயர் அதிகாரிகள் எமது பள்ளிவாசல்களுக்கு வந்தவன்னமேயிருக்கின்றனர்.
எமது ஒரே வேண்டுகோள் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கவேண்டும். இனி எமது நாட்டின் எந்தப் பள்ளி வாசல்களுக்கும் இப்படியான அச்சுறுத்தல் இருக்கக்கூடாது என்பதாகும் என தெரிவித்தார். விடிவெள்ளி
Post a Comment