Header Ads



மைத்திரியின் அமைச்சே, மிக மோசமானது - பாராளுமன்றத்தில் அம்பலமாகியது

மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பில் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு இந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், அரையாண்டு காலத்தில் 3.3 வீதத்தை மட்டுமே செலவிட்டுள்ளதாக அரசாங்கத்தின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன் மூலம், அமைச்சுக்களின் மோசமான வினைத்திறன் கொண்ட அமைச்சாக, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு அடையாளம் காணப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில், அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில்  ஜனவரி முதல் ஜூன் வரையான ஆறு மாத காலத்தில் அமைச்சுக்கள் செலவீடு செய்துள்ள நிதி பற்றிய தகவல்கள் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இதற்கமைய, அரசாங்கத்தில் உள்ள இரண்டு அமைச்சுக்கள் மாத்திரமே, ஒதுக்கப்பட்ட நிதியில் 50 வீதத்துக்கு மேல் செலவிட்டுள்ளன.

சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு, இந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், 70.4 வீதத்தை முதல் ஆறு மாதங்களில் செலவிட்டுள்ளது.

அடுத்ததாக, அஞ்சல் மற்றும் அஞ்சல் சேவைகள் அமைச்சு, ஒதுக்கப்பட்ட நிதியில், 50.5 வீதத்தை செலவழித்துள்ளது.

பல்வேறு அமைச்சுக்களுக்கும் இந்த ஆண்டில், 3, 628,110.4 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அதில், 1,792,165.1 மில்லியன் ரூபா மாத்திரம், முதல் அரையாண்டு காலத்தில் செலவிடப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பில் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு இந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், 3.3 வீதத்தை மட்டுமே செலவிட்டுள்ளது. டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு, 3.9 வீதமான நிதியை செலவிட்டுள்ளது.

சுற்றுலா அமைச்சு 6.8 வீதமும், பொதுத்துறை நிறுவனங்கள் அபிவிருத்தி அமைச்சு 5.9 வீதமும், தமக்கான ஒதுக்கீடுகளை செலவிட்டுள்ளன என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.