Header Ads



கத்தாரைச் சேர்ந்தவர்களுக்காக, எல்லையை திறக்கிறது சவுதி

கத்தாரைச் சேர்ந்த ஹஜ் யாத்திரிகர்களுக்காக சவுதி – கத்தார் எல்லையை மீண்டும் திறக்க சவுதி அரேபிய மன்னர் தீர்மானித்துள்ளார்.

தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்வதாகக் கூறி கத்தார் உடனான உறவை முறித்துக்கொள்வதாக சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், எகிப்து, பஹ்ரைன், ஏமன் உள்ளிட்ட 6 அரேபிய நாடுகள் கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தன.

வளைகுடா நாடுகளுக்கிடையே இந்த விவகாரம் இன்னும் தீராத நிலையில், குவைத், ஈரான், துருக்கி உள்ளிட்ட நாடுகள் கத்தாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தன.

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா, மதினாவுக்கு ஆண்டுதோறும் கத்தாரிலிருந்து யாத்திரிகர்கள் செல்வது வழக்கம்.

இரு நாடுகளுக்குமிடையே தற்போதுள்ள பிளவால் கத்தார் யாத்திரிகர்களை சவுதி அனுமதிக்குமா, என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், கத்தாரைச் சேர்ந்த ஹஜ் யாத்திரிகர்களுக்காக அந்நாட்டுடனான எல்லையைத் திறக்க மன்னர் சல்மான் முடிவு செய்துள்ளதாக சவுதி அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து விமானங்கள் மூலம் யாத்திரிகர்களை அனுமதிக்கவும் சவுதி முடிவு செய்துள்ளது.

முன்னதாக, தமது நாட்டைச் சேர்ந்த யாத்திரிகர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கத்தார் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.