அளுத்கம கலவரத்தில் மரணித்த, காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு - அமைச்சரவை அனுமதி
அளுத்கம, பேருவளை மற்றும் தர்காநகரில் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டயீடு வழங்குவதற்கு அமைச்சரவை இன்று (22) அனுமதியளித்துள்ளது. இதன்பிரகாரம் கலவரத்தில் மரணித்தவர்களுக்கு 20 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும் நஷ்டயீடாக வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளுக்கமைய, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து விவகாரங்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு 1 இலட்சம் ரூபா நஷ்டயீடு வழங்கும் நடைமுறையே இருப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தை காரணம் காட்டினார். இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், இந்த நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு அளுத்கம, பேருவரை, தர்காநகர் இனக்கலவரமே பிரதான காரணமாக அமைந்தது. எனவே, அதில் பாரபட்சம் பார்க்காமல், குறிப்பிடப்பட்டுள்ள நஷ்டயீட்டுத் தொகையை வழங்குமாறு கூறினார்.
அப்படியானால், இரு சமூகத்துக்கும் சம அளவிலான நஷ்டயீட்டை வழங்கவேண்டுமென கூறப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், குறித்த கலவரத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது முஸ்லிம்களே. இக்கலவரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் அநீதி இழைக்காமல் அவர்களுக்குரிய நஷ்டயீட்டுத் தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
குறித்த கலவரத்தில் எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று ஜனாதிபதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வினவினார். 3 முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளனர் என்று பதிலளித்ததும், உடனடியாக மரணித்தவர்களுக்கு 20 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும் வழங்குமாறு உத்தரவிட்டார். பேருவளை பிரதிநிதித்துவப்படும் பிரதிநிதி என்றவகையில் அமைச்சர் ராஜித சேனரத்னவும் இதற்கு ஆதரவாக பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What about compensating the property damages and torched houses???????
ReplyDeletewell done
ReplyDeletegreat job may allah bless them all
ReplyDelete