கடைசி போட்டி, போல்ட்டின் கனவு நிறைவேறவில்லை
தனது தடகள வாழ்வின் கடைசி சர்வதேசப் போட்டியில் தங்கம் வெல்ல விரும்பிய ஜமைக்க வீரர் உசைன் போல்ட்டின் கனவு நிறைவேறாமல் போனது.
உசைன் போல்ட் கடைசியாகக் கலந்துகொண்ட, லண்டனில் நடைபெற்ற சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், கடந்த காலங்களில் பல சர்ச்சைகளுக்கு உள்ளான அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் தங்கம் வென்றார்.
21 வயதான இன்னொரு அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மேன் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றதால் போல்ட்டுக்கு வெண்கலப் பதக்கமே மிஞ்சியது.
முதலிடத்தை பிடித்த ஜஸ்டின் கேட்லின் இதற்கு முன்பு ஒரே முறை மட்டுமே போல்ட்டை வென்றுள்ளார்
ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் இது வரை இரண்டு முறை தடை செய்யப்பட்டுள்ள, 35 வயதான கேட்லின் 9.92 வினாடிகளில் முதலிடம் பிடித்தார். 9.94 வினாடிகளில் இரண்டாம் இடம் பெற்ற கோல்மேன், தடகள வரலாற்றில் ஆகச் சிறந்த வீரராகக் கருதப்படும் போல்ட்டை மூன்றாம் இடத்துக்குத் தள்ளினார்.
இந்தப் போட்டிகளின் தொடக்கத்தில் இருந்தே போல்ட் உடல் தகுதி இல்லாமல் போராடிய போதும், அவர் தனது 20-வது சர்வதேச தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்றே ரசிகர்கள் விரும்பினர்.
கடந்த 2015-ஆம் பெய்ஜிங்கில் நடைபெற்ற சர்வதேசத் தடகளப் போட்டியில், தொடர்ந்து 28 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த கேட்லின்தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 2012-ஆம் ஆண்டு நூறு மீட்டர் போட்டியில் தான் ஒலிம்பிக் தங்கம் வென்ற அதே 'பறவைக்கூடு' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த உள்விளையாட்டு அரங்கில் போல்ட் வெற்றி பெற்று அதிசயம் நிகழ்த்தினார்.
எது எப்படியோ, போல்ட்டின் நேர்த்தியான தடகளச் சரித்திரம் நேர்த்தியான முடிவைச் சந்திக்கவில்லை.
Post a Comment