திருமணத்தன்று அணியில் இணைந்து, 6 விக்கெட்டுக்களை வீழ்த்திய தனஞ்சயவின் சோகம்
கண்டி பல்லேகலயில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வென்றிருந்தாலும் ஆட்ட நாயகன் விருதை வென்றது இலங்கை அணியின் மந்திர சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சயதான். காரணம் முக்கியமான கட்டத்தில் சீரான இடைவெளியில் ரோஹித் ஷர்மாவில் ஆரம்பித்த விக்கெட், விராட் கோஹ்லி, ராகுல், பாண்டியா, ஜாதேவ், அக்ஸர் பட்டேல் வரை நீண்டது.
இலங்கை - இந்திய அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி கண்டி பல்லேகலயில் நேற்று நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இப் போட்டியில் இலங்கை அணியின் அகில தனஞ்சய தனது மாயாஜால சுழற்பந்துவீச்சில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தன்பக்கம் திருப்பினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் டோனியும், புவனேஷ்வர் குமாரும் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த ஜோடி கடைசி வரை நிலைத்து நின்று விளையாடி இலக்கை எட்டியது. 45ஆவது ஓவரில் இந்தியா 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றாலும்கூட ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் இருந்தது அகில தனஞ்சய மீதுதான். அனைவரும் அவரை கவலையுடன்தான் பார்த்தனர். காரணம் ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்தி அதுவும் முக்கியமான துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுக்களை வீழ்த்தியும் இலங்கை அணியால் வெற்றிபெற முடியாமல் போய்விட்டதே என்பதுதான்.
இத்தனைக்கும் அகில தனஞ்சய நேற்றுமுன்தினம்தான் இரவு 11 மணியளவில் கண்டி வந்தடைந்துள்ளார். காரணம் நேற்றுமுன்தினம் காலையில்தான் அவருக்கு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தன்றுதான் அவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்பிறகே அவர் உடனடியாக போட்டி நடைபெறும் கண்டி பல்லேகலக்கு வந்தடைந்துள்ளார்.
இந்தப் போட்டியில் இந்தியா வென்றிருந்தாலும் ஆட்ட நாயகன் விருதை அகில தனஞ்சயதான் வென்றார். ஆட்ட நாயகன் விருதை வாங்கிய பின் அவர் பேசுகையில்,
ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் தோற்றுவிட்டோமே என்ற கவலை அதைவிடவும் இருக்கிறது.
வென்றிருந்தால் மகிழ்ச்சியாக சென்றிருப்பேன். நேற்றுத்தான் ( புதன்கிழமை) நான் திருமண பந்தத்தில் இணைந்தேன். திருமண வைபவம் முடிந்தவுடன் நான் போட்டியில் பங்கேற்க இங்கு வந்து சேர்ந்தேன் என்று சொல்லி முடித்தார் சோகமாக.
நேற்றைய போட்டியில் இந்திய அணியை மிரட்டிய அகில தனஞ்சய தனது கிரிக்கெட் வாழ்க்கையிலும் இல்லற வாழ்க்கையிலும் சிறப்புற வாழ நாமும் வாழ்த்துகிறோம்.
ewarana photo kel etil poduvatu porutam Ellai
ReplyDelete