இலங்கைக்கு வழங்கப்பட்ட 600 கோட்டாக்களும் விநியோகம்
சவூதி அரேபிய ஹஜ் அமைச்சினால் இறுதி நேரத்தில் வழங்கப்பட்ட மேலதிக 600 ஹஜ் கோட்டாக்களும் (விசாக்கள்) நேற்று மாலை பூரணப்படுத்தப்பட்டன.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர் நிலையங்களூடாக பயணிகள் நேற்று தம்மைப் பதிவு செய்து கொண்டனர்.
ஹஜ் கட்டணமாக 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா முதல் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை ஹஜ் முகவர்களால் அறவிடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் உறுப்பினரும் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சருமான எம்.எச்.ஏ. ஹலீமின் பிரத்தியேக செயலாளருமான எம்.எச்.எம். பாஹிம் கருத்து தெரிவிக்கையில்,
ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு மேலும் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். இறுதி நேரத்தில் இலங்கைக்கு 600 ஹஜ் விசாக்கள் கிடைத்தமை எமக்குக் கிடைத்த பாக்கியமாகும். மேலதிக 600 ஹஜ் பயணிகளும் எதிர்வரும் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் பயணிக்கவுள்ளார்கள். அதற்கான ஏற்பாடுகளை அரச ஹஜ் குழுவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மேற்கொண்டுள்ளன.
சவூதி அரேபியாவில் மக்கா, மதீனா அஸீஸியாவில் இவர்களுக்கான தங்குமிட வசதிகள் தற்போது சவூதியிலுள்ள இலங்கை ஹஜ் முகவர்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
-ARA.Fareel-
Post a Comment