மாணவன் செலுத்திய கார், மின் கம்பத்தை முத்தமிட்டு 4 பேர் வைத்தியசாலையில்..!
ஆராச்சிக்கட்டு அடிப்பள வீதியில் கார் ஒன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் 16 மற்றும் 17 வயதான நான்கு பாடசாலை மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டு பொலிஸார் தெரிவித்தனர். ஆராச்சிக்கட்டு பண்டாரஹேன எனும் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விபத்தில் காயங்களுக்கு உள்ளானவர்களாவர்.
விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலை ஆபத்தானதாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், இவ்விபத்தினால் கார் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, அக்கார் மோதிய மின்கம்பமும் முறிந்து வீழ்ந்தது. காரும் குடைசாய்ந்தது. இந்தச் சம்பவத்தினால் அப்பிரதேசத்துக்கான மின் விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வாகனத்தைச் செலுத்திய மற்றும் காரில் பயணித்த எந்த ஒருவரிடத்திலும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டார் வீட்டில் இல்லாத சமயத்தில் கார் ஓட்டும் ஆசையில் வீட்டிலிருந்து காரை எடுத்துக் கொண்டு அயலில் வசிக்கும் நண்பர்களோடு இவ்வாறு வீதியில் சென்று கொண்டிருந்ததாக விபத்தில் சிக்கிய மாணவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் தன்மையைப் பார்க்கும் போது மாணவர்கள் பலத்த காயங்களின்றி தப்பியமை ஆச்சரிமளிக்கின்றது என்றும் வாகனங்கள் இருக்கும் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு வாகனங்களை வழங்கும் போது மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். ஆராச்சிக்கட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment