பேஸ்புக் + வட்ஸப்பில் இஸ்லாமிய அடிப்படையில், மிக முக்கியமாக அறியவேண்டியவை..!
சமூக வலைத்தளங்களை ஓர் அருளாக பயன்படுத்துவோம்
-T.M.Mufaris Rashadi-
அல்லாஹ் தனது திருமறையில் நாம் ஒவ்வொரு ரஸூல்மாரையும் அக்கூட்டத்தார் பேசுகின்ற மொழி பேசுபவராகவே அனுப்பி வைத்தோம் என்கிறான். ஸூரா இப்ராஹீம் -04 வது வசனம். இந்த வசனத்தில் வந்துள்ள (லிஸானுல் கௌம்) என்ற சொல் ஒரு கூட்டத்தாரின் மொழி, பாஷை அதையும் தாண்டி அவர்களது காலத்தில் செல்வாக்குச் செலுத்துகின்ற ஊடகம் என்றும் கருத்துக் கொள்ளலாம். அதற்கு உதாரணமாக நபியவர்களின் ஸீராவிலிருந்து தகுந்த விளக்கங்களை பெற்றுக்கொள்ள முடிகிறது. முதன் முதலாக நபியவர்கள் தமது பகிரங்க தஃவாவை மேற்கொள்ள தேர்ந்தெடுத்த இடம் ஸபா என்ற மலையாகும். அங்கிருந்துதான் மக்கா வாசிகளை அழைத்து தனது தூதுச் செய்தியை எத்தி வைத்தார்கள்.
அன்று அந்த மலைதான் மிகப்பெரும் ஊடகமாகத் திகழ்ந்தது. அதனையே நபியவர்கள் தனது தஃவாவிற்கு பயன் படுத்தியுள்ளார்கள். இன்று நாம் வாழ்கின்ற உலகம் அறிவும் தொழிநுட்பமும் வளர்ச்சியடைந்த காலமாகும்.
பேஸ்புக், டுவிட்டர், யூடியூப், வாட்ஸப், வைபர், கூகுள் ப்ளஸ் இது போன்றவைகளால் தீங்குகள் பல சமூகத்துக்கு இருந்தாலும் இவை இன்றைய உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கின்றன. அந்த வகையில் சமூக வலைத்தளங்களை ஓர் அருளாக பயன்படுத்துவதற்கான சில வழிகாட்டல்களை இங்கு தர முனைகிறோம்.
1.- உண்மையை மட்டும் பேசுதல், எழுதுதல், பகிர்தல் என்பதே அடிப்படை.
உண்மை பேசுதல், வாழ்வில் உண்மையை கடைப்பிடித்தல் என்பது வாழ்க்கையின் அடிப்படை அம்சமாகும். இைணய உலகிலும் பொய் தவிர்க்கப்பட்டு இந்த உண்மை பிரயோகிக்கப்பட வேண்டும். இல்லையேல் நாளை மறுமையில் அதற்கும் நாம் இறைவனிடம் பொறுப்புக் கூற வேண்டும் என்ற விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –
நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக உண்மை என்பது நன்மைக்கு வழி காட்டுகிறது. நன்மை சுவனம் செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையே பேசிக்கொண்டிருகிறான். இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்!
மேலும் திண்ணமாக பொய் என்பது தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் பொய் பேசிக்கொண்டிருக்கிறான். இறுதியில் அல்லாஹ்விடத்தில் மகாப் பொய்யன் என்று எழுதப்படுகிறான்! (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
2.- உள்ளங்களில் உதிப்பவைகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வதை தவிர்ந்து கொள்வோம்.
நமது சிந்தனையில் உதிப்பவைகள், பிறரைப் பற்றிய யூகங்கள், கற்பனைகளை உண்மை போன்று பதிவிடுவதை நாம் தவிர்ந்துகொள்ள வேண்டும்.
அல்லாஹ் தனது திருமறையில்; நம்பிக்கை கொண்டோரே! சந்தேகமான பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக எண்ணங்களில் சிலது பாவமாகும். என்று (49:12)இல் குறிப்பிடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்."பிறர் மீது கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் கெட்ட எண்ணம் தான் பேச்சுக்களிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்.ஒருவரையொருவர் வெறுத்துக் கொள்ளாதீர்கள். ஒருவரையொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். அனைவரும் சகோதரர்களாய் இருங்கள்”என்று மா நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் இந்த செய்தி புகாரி 5143 இல் இடம் பெற்றிருக்கிறது.
3.- செய்திகளின் உண்மைத்தன்மையையும் பதிவாளரின் நம்பகத் தன்மையையும் பரிசீலித்துக் கொள்ளுதல்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒரு மனிதன் தான் கேள்விப்பட்டதையெல்லாம் பேசுவதே அவன் பொய்யன் என்பதற்கு போதிய சான்றாகும். (முஸ்லிம்)
அல்லாஹ் தனது திருமறையில் முஃமின்களே! பாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதனை தீர விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக ஆகிவிடுவீர்கள். (அல் குர்’ஆன் 49:6)
ஹதீஸ்களை அறிவிப்பவர்கள் விடயத்தில் முன்னைய அறிஞர்கள் மேற்கொண்ட குறித்த அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை, நேர்மை பற்றிய பரிசீலனை வழிமுறையை இன்றைய யுகத்திலும் குறிப்பாக செய்திகளை பரிமாறிக் கொள்வதிலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். நம்மிடம் வரும் நல்ல செய்தியாக இருந்தால்கூட அச்செய்தி ஆதாரபூர்வமானதா இல்லையா? என தீர விசாரித்து அறிந்து கொள்ளாதவரை அவசரமாக மக்களிடையே பரப்ப வேண்டாம் என்றே அறிஞர்கள் அறிவுறுத்துகின் றார்கள். ஏனென்றால், நமக்கு செய்தியை அனுப்பியவர் தவறானதையோ வதந்தியையோ அனுப்பியிருந்தால், மற்றவர்களிடம் நமது நம்பகத்தன்மை குறித்து தவறான மனப்பதிவு ஏற்பட்டு விடும்.
4-. பாவங்களை பகிரங்கப்படுத்துதல் மன்னிக்கப்படாத குற்றமாகும்.
எனது உம்மத்தில் அனைவரும் மன்னிக்கப்படுவார்கள், செய்த பாவத்தை மக்கள் மன்றத்தில் பகிரங்கப் படுத்தியவனைத் தவிர என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புஹாரி)
நாம் செய்த பாவங்களை ஆர்வக்கோளாறினால் நான் அப்படிச் செய்தேன், இப்படி செய்தேன் என பிறரோடு பகிர்ந்து கொள்வது மிகப்பெரும் பாவமாகவே கருதப்படுகிறது.
5.- கியாமத் நாள் வரை தொடரும் உங்கள் இணையக்கணக்குகள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; நிச்சயமாக ஒரு மனிதன் தீமையற்றது என எண்ணி கூறிய ஒரு சொல் அவன் நரக நெருப்பின் பாதாளத்தில் விழக்காரணமாகிவிடக் கூடும். (புஹாரி)
ஒவ்வொரு நன்மையான காரியமும் குறைந்தது ஒன்றுக்கு பத்து மடங்காகப் பெருகும். ஆனால், ஒரு பாவம் அதன் எண்ணிக்கை ஒன்றாகத் தான் இருக்குமே தவிர பெருகாது என்று அல்குர்ஆன் கூறுகிறது. ஆனால், சமூக ஊடகங்களின் மூலம், தீய சொற்களும், தவறான செயல்களும், மீண்டும் மீண்டும் பலர் மூலமாக பகிரப்படும். நீங்கள் ஒருவரைப் பற்றி புறம் பேசியிருந்தீர்கள், அவதூறு பரப்பியிருந்தீர்கள் என்றால், அதனை நூறு பேர் லைக் (Like) செய்து, பகிர்ந்தார்கள் (Share) என்றால் அவர்களுக்கு தெரியப்படுத்தியவர் நீங்கள் தான் என்ற வகையில் லைக் செய்த நூறு பேரின் பாவங்களையும் பகிர்ந்தவர்களின் பாவங்களையும் பகிர்ந்தவைகளை பார்ப்பவர்கள் என பட்டியல் விரிந்து கொண்டே செல்லும். அதே நேரம் நாம் மரணித்தாலும் கியாமத் நாள் வரை இணையக் கணக்குகளின் நன்மையோ தீமையோ எங்களை வந்தடைந்து கொண்டே இருக்கும்.
6.- இரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அல்லாஹ்வின் முன்னிலையில் மக்களிலே மிக மோசமானவர் யாரென்றால், தனது மனைவியுடன் அந்தரங்கமாக இருந்து விட்டு அவளுடைய இரகசியங்களை வெளியே பரப்புபவர்தான்.(புஹாரி)
மேலுள்ள செய்தி கணவன் மனைவிக்கிடையே நடக்கின்ற தாம்பத்திய இரகசியங்களை பரப்புவதைப் பற்றி தான் குறிப்பிடுகிறது. அது போன்று பொதுவாக இன்று சமூக வலைத்தளங்களில் பிறரது ஆசையைத் தூண்டும் விதமாக கணவர் கொடுத்த பொருட்களின் படங்கள் அல்லது அவருடன் வெளியே சென்றபோது எடுத்த புகைபடங்கள், மருதாணி போட்ட கைகள், முகம் தெரியாது பின் பக்க அமைப்பு போன்றவற்றை பெண் சகோதரிகள் பதிவிடுவதையும் தவிர்த்துக் கோள்வதே சாலச்சிறந்ததாகும். இவை மிகவும் அந்தரங்கமானவை மட்டுமல்ல பதிவிட தேவையற்றதுமாகும். இதனை வெளிப்படுத்துவதால் இறை அன்பைப் பெறுவதை விட்டும் உங்களை தூரமாக்கி விடுகின்றது.
7-. நாம் மரணித்தாலும் நமது பதிவுகள் மரணிப்பதில்லை.
உங்களிடம் கூறப்படும் “நீ உனது புத்தகத்தைப் படித்துப்பார். இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்குச் சொல்லப் போதுமானது. (அல் குர்’ஆன்17:14] உங்களுடைய கணக்கை நீங்கள் அழித்து வெகு நாட்கள் ஆகி விட்டாலும், உங்களுடைய செயலேட்டில் அவை வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதனை சிந்தித்து செயற்படவேண்டும். கால நேரங்கள் அல்லாஹ்வினால் எமக்கு வழங்கப்பட்ட அமானிதமாகும் அதனை நாம் நன்மையான, பயனுள்ளவற்றில் பயன்படுத்தினோமா. என மறுமையில் வினவப்படுவோம், உங்களுடைய பதிவேடு உங்கள் கையில் கொடுக்கப்படும் நாளில் முகநூல் பக்கங்களில் நீங்கள் பங்கு பெற்ற வீண் உரையாடல்கள், வாட்ஸப்பிலும், டுவிட்டரிலும் நீங்கள் ஈடுபட்ட வீண் அரட்டைகள், குதர்க்கங்கள் போன்றவற்றைப் நமது சிந்தனையில் நிறுத்தி செயற்பட முயற்சிக்க வேண்டும்.
8-. புறம் விபச்சாரத்தை விட பயங்கரமானது.
புறம் என்பது பேசுவதில் மட்டுமல்ல எழுத்திலும் அது இருக்கின்றது. நாம் பிறரைப்பற்றி அவர்கள் வெறுக்கின்ற விடயங்களை பகிர்ந்து கொள்வதும் மிகப்பெரும் பாவமாகும். அதுவும் புறம் பேசுதல் என்ற பகுதிக்குள் வந்து விடுகிறது.
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே! (நயவஞ்சகர்களே) முஸ்லிம்களைப் பற்றி புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின்தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின்தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்” என கூறினார்கள் (நூல்: அஹ்மத்)
வட்டியில் எழுபத்திரெண்டு வகைகள் உள்ளன. அவற்றில் மிகக் குறைந்தது ஒருவன் தன் தாயிடம் உடலுறவு கொள்வதற்குச் சமமானதாகும். வட்டியிலேயே மிகக் கொடுமையானது தன் சகோதரனுடைய மானம் மரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துவதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: (ஸில்ஸிலத்துல் ஸஹீஹா 1871)
நவீன கண்டுபிடிப்புக்கள், தொழிநுட்ப சாதனங்கள், சமூக வலைத்தளங்கள் இவையனைத்துமே அடிப்படையில் இறைவன் மனிதனுக்கு வழங்கிய பெரும் அருட்களே இவைகளை மேற் சொன்ன எட்டு அடிப்படைகளையும் பேணி அவனது அருள்களையும் பொருத்தத்தையும் பெறும் நோக்கில் பயன்படுத்தி அதன் மூலம் ஈருலகிலும் ஜெயம் பெறுவோமாக!
Post a Comment