Header Ads



"கொலையாளியின் இலக்கு, நீதிபதி அல்ல" (பொலிஸாரின் விளக்கம் இதோ..) வீடியோ

-பாறுக் ஷிஹான்-

நல்லூரில் நேற்று(22) சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தவை முழுமையாக வெளியிடப்படுகின்றது.

நீதிபதியின் கார் நல்லூர் நோக்கி வந்துகொண்டிருந்தது. அவ்விடத்தில் சன நெரிசல் காணப்பட்டது. அதனை நீதிபதியின் பாதுகாப்பிற்கு வந்த பொலிஸ் சார்ஜன்  உணர்ந்து வீதியைக் கிளியர் செய்ய முனைந்தார். அதன்போது அங்கு இருந்த ஒருவருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அவர் மது அருந்தியிருந்தார்.

 அவர் சார்ஜனைத் தள்ளிவிட்டுள்ளார் அதன்போது சார்ஜனும் அவரைத் தள்ளிவிட்டுள்ளார். உடனே பொலிஸ் சார்ஜனின் இடுப்பில் இருந்த பிஸ்ரலை எடுத்தார் அதன்போது இருவரும் கீழே விழுந்துவிட்டார்கள். அவ்வேளையில் நீதிபதி காரிலிருந்து கீழிறங்கி வந்து பார்த்துள்ளார். அதன்போது தான் கண்டவற்றை அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய பாதுகாப்பிற்காக மோட்டார் சைக்கிளில் வந்த சார்ஜனுடைய துவக்கினை அந்த சந்தேக நபர் பொக்கற்றில் இருந்த எடுத்ததாகவும் அதேவேளை இருவரும் சண்டையிட்டுக்கொண்டதாகவும் சந்தேக நபர் அதன்போது சாஜனை நோக்கிச் சுட்டதாகவும் அதே சந்தர்ப்பத்தில் சார்ஜனுக்கு உதவியாக வந்த பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்தில் இருந்து இறங்கி சந்தேக நபரை நோக்கச் சுட்டுள்ளார் அந்த சூடு சந்தேக நபருக்கு பட்டதாக பொலிஸ் உத்தியோகத்தர் கூறியுள்ளார். 

அதேநேரத்தில் சந்தேக நபர் சார்ஜனையும் சுட்டுள்ளார். அதன்போது சார்ஜன் கீழே விழுந்துவிட்டார். உடனே சந்தேகநபர் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு மற்ற வழியாக தப்பிச் சென்றுவிட்டார்.

தப்பிச் சென்ற நேரத்திலே சார்ஜனுக்கு உரித்தான பிஸ்ரலை இடையிலே போட்டுவிட்டுச் சென்றதாக நாங்கள் சந்தேகப்படுகின்றோம். இதனை நாங்கள் விசாரண மூலம் கண்டறிவோம். கைவிட்டுச் சென்ற துப்பாக்கி பொலிஸ் சார்ஜனுடையதா அல்லது அந்த சந்தேக நபருடையதா என்பதை நாங்கள் இரு நாட்களில் கண்டறிவோம்.

சார்ஜனுக்கு வயிற்றுப் பகுதியில் சூடு பட்டிருந்தது. சார்ஜனைக் காப்பாற்றுவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் சுட்ட அடையாளங்கள் பக்கத்து வீட்டிலுள்ள தகரத்திலே மூன்று வெடிகள் பட்டிருப்பதோடு  நிலத்திலே 09 அடையாளங்கள் காணப்படுகின்றன. இதனைப் பார்க்கும்போது அந்த நபர் துவக்கினைப் பாவிக்கக்கூடிய அனுபவமுள்ள ஒரு ஆளாக இருக்க முடியும். 

அவர் மேல்நீதிமன்ற நீதவானுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று வந்தாரா அல்லது தான் மதுபானம் அருந்திருந்தபடியால் தப்பிச்செல்வதற்காக அவ்வாறு நடந்துகொண்டாரா என்பது தொடர்பில் நாங்கள் விசாரணை செய்வோம்.

நீதிபதியின் வானத்தில் எதுவித சேதங்களும் இல்லை.  நீதிபதி இறங்கிவந்து பார்த்தபோது அவரது பாதுகாப்பு பொலிஸ் சார்ஜன் நிலத்தில் கிடந்திருக்கிறார். உடனடியாக தனது வாகனத்தில் ஏற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருக்கிறார்.

இது எப்படி நடந்தது யாருக்காக நடந்தது என்பது பற்றி விசாரணைகளின் பின்பே முழுமையாகக் கூற முடியும்.

ஆனால் நான் இப்போது ஸ்தலத்தில் நிற்கின்றேன்.  நிச்சயமான இது நீதிபதியைத் தாக்கும் நோக்கோடு மேற்கொள்ளப்படவில்லை. பொலிஸ் உத்தியோகத்தர் மதுபோதையில் நின்றவரைத் தண்டிப்பதற்காக  முற்பட்டதன் பிரதிபலித்தான் என்று என்னால் தற்போது சொல்ல முடியும்.

நீதவானுக்கு ஏதாவது மரண அச்சுறுத்தல் இருந்தால் நிச்சயமாக அவரது வாகனத்திற்கு சூடு பட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடைபெறவில்லை. நீதவானும் வெளியே வந்திருக்கிறார். சார்ஜனும் அந்த குற்றவாளியும் செய்த நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறார். அந்தநேரத்தில் நீதவானைச் சுடவேண்டும் என்றால் குற்றவாளியால் நேராக அவரைச் சுட்டிருக்கலாம். 

அந்தநேரத்தில் துவக்கு குற்றவாளியின் கையிலேயே இருந்தது. ஆனால் அவ்வாறு சம்பவம் ஏதும் நடைபெறவில்லை. நிச்சயமாக  இது அந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் நடந்த ஒரு விடையமேஒளிய நீதவானுக்கு ஒருவிதமான மரண அச்சுறுத்தலும் யாழ்ப்பாணத்தில் இல்லை என்பது எனக்கு (நான்) விசாரணை மூலம் அறிந்த உண்மை. இன்னும் ஒரு வாரத்திற்குள் நாங்கள் முழுமையான விடையங்களை உங்களுக்கு அறிந்து தருவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் (வீடியோ)

No comments

Powered by Blogger.