Header Ads



முஸ்லிம்கள் பற்றி, கபீர் ஹாசிம் பேசமறுப்பது ஏன்..?

முஸ்லிம்கள் மீது கரிசனையற்ற கபீருக்கு சிங்கள மக்கள் மீதே கொள்ளை பிரியம் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் தேசமான்ய பாறூக் ஏ.லதீப் குறிப்பிட்டார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை முஸ்லிம்கள் மீது தொடர்ந்து கொண்டிருக்கும் இனவாதிகளின் விடயங்களில் அமைச்சர் கபீர் ஹாசிமின் பேச்சை ஒரு முஸ்லிம் அமைச்சர் என்ற வகையிலும் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் என்ற வகையிலும் இலங்கை முஸ்லிம் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இருந்தாலும் இவர் எச் சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்களின் விடயங்கள் தொடர்பாக பேசியதில்லை.

அண்மையில் அஸ்கிரிய பீடமானது தற்போது கொண்டுவர முயற்சிக்கப்படும் அரசியலமைப்பானது பௌத்த மதத்துக்கு வழங்கும் முக்கியத்துவத்தை குறைக்குமென்ற  சிந்தனை கொண்டு அதனை தடுக்கும் வகையிலான கோரிக்கையை முன் வைத்திருந்தது. இதற்கு விழுந்தடித்து வந்து அமைச்சர் கபீர் ஹாசிம் அப்படியெல்லாம் நடக்காது என அவர்களை சாந்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தோடு அப்படியானதொரு செயல் நடைபெறாது என்ற உறுதி மொழி வழங்கும் பாணியிலான பேச்சையும் அமைத்திருந்தார்.

வருடக் கணக்கில் நடக்கும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் பற்றி கதைக்க வராத அமைச்சர் கபீர் ஹாசிம், இவ்விடயத்தில் விழுந்தடித்து வந்தமையானது அவர் முஸ்லிம்களின் விடயங்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை என்ற விடயத்தை சுட்டிக்காட்டுவதோடு அவர் தான் அங்கம் வகிக்கும் கட்சிக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் மாத்திரமே பேச வருவார் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

இவ்வாறனவர்கள் முஸ்லிம் பெயர் தாங்கிய அரசியல் வாதிகள்  இவ்வரசின் முக்கிய தூணாக விளங்குவதால் அது சர்வதேசங்களுக்கு தவறான செய்தியை கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கின்றது. அவைகளே சர்வதேசம் நோக்கிய முஸ்லிம்களின் தீர்வை நோக்கிய பாதையில் தடை கற்களாகவும் அமைந்துள்ளன. முஸ்லிம்கள் விடயங்களின் பேசா மடந்தைகளாக இருக்கும் இவரைப் போன்றவர்களை பாராளுமன்றம் தெரிவு செய்யும் மக்களே முதல் குற்றவாளிகளாவர் என்பதை அவரை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பிய முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

No comments

Powered by Blogger.