Header Ads



கனடாவில் மனைவி கொலை, நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கட்டுநாயக்காவில் கைது

னடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கியூபெக்கில் தனது மனைவியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையரே நாடு கடத்தப்பட்டுள்ளார்.

அவரது வழக்கில் ஏற்பட்ட நியாயமற்ற தாமதங்களின் பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கனடாவில் நிரந்தர குடியுரிமையை பெற்ற சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற இலங்கையரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கனேடிய உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகிய சிவலோகநாதனின் தடுப்புக்காவல் மறு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது. எனினும் அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு குடியேற்ற மற்றும் அகதி வாரிய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

21 வயது மனைவி அனுஜா பாஸ்கரனை கொலை செய்த குற்றச்சாட்டிற்காக 31 வயதான இலங்கை அகதி தனபாலசிங்கம் கடந்த 2012ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

Montreal குடியிருப்பு பகுதியில் இருந்து அவரது மனைவியின் சடலம் மீட்கப்பட்டது. அவரது மனைவியின் கழுத்தில் 20 முறை குத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொலை குற்றச்சாட்டு வழக்கு விசாரணையின் கால எல்லை கனடா உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியதாகக் கருதப்பட்டது. இதனால், விசாரணைகள் ஏறக்குறைய ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதி Alexandre Boucher இந்த வழக்கினை விசாரணை செய்ய நீண்ட காலம் எடுத்துக் கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் அவரது வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்து அவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறும், தானாகவே நாடு கடத்தலை எதிர்கொள்ள விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் தனபாலசிங்கம் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.