பிழைகளை மூடி மறைக்கின்றனர் - ஞானசாரர்
நல்லாட்சி அரசாங்கமும், கூட்டு எதிர்க்கட்சியும் இணைந்தே செயற்பட்டு வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகம்புர துறைமுகத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கு முன்னதாக கூட்டு எதிர்க்கட்சியின் தரப்பினர் ஊடக சந்திப்புக்களை நடத்தி தேசப்பற்றை வெளிப்படுத்தியிருந்தனர்.
எனினும் துறைமுகம் சீனாவிற்கு விற்பனை செய்யப்பட்ட போது அந்த தேசப்பற்றை கூட்டு எதிர்க்கட்சியின் ஒருவரிடமும் காண முடியவில்லை.
மெய்யாகவே இதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தால் பல்வேறு விடயங்களை செய்திருக்க முடியும்.
அவர்களினால் முடியாததை இவர்களும் இவர்களினால் முடியாததை அவர்களும் செய்யும் ஓர் அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆளும் கட்சியினதும் கூட்டு எதிர்க்கட்சியினதும் பிழைகளை ஒருவர் மாறி ஒருவர் மூடி மறைத்து வருகின்றனர்.
நாட்டின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதாக கூச்சலிட்ட மக்களை கூட்டு எதிர்க்கட்சி அணி திரட்டத் தவறியுள்ளது.
இந்த இரண்டு தரப்பினரதும் நடிப்பிற்கு நாட்டு மக்கள் ஏமாந்துள்ளனர். இதனால் நாட்டின் எதிர்கால தலைமுறையே பாதிக்கப்படும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
Post a Comment