'ஞானசாரருக்கு பயந்து பொலிஸாரும், அதிகாரிகளும் உறைந்துபோய் நின்றனர்'
-MFM.Fazeer
கலகொட அத்தே ஞானசார தேரர் அன்று ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் நடந்து கொண்ட முறைமையானது வன்முறையை வெளிப்படுத்தியது. அவரது நடவடிக்கைகள் கடும் பயத்தை ஏற்படுத்தியது. ஞானசார தேரர் நீதிமன்றை அவமதிக்கும் வகையில் இவ்வாறு தொடர்ச்சியாக நடந்து கொண்ட போதும், அவரைக் கைது செய்வதற்கான போதுமான கால அவகாசம் இருந்த நிலையிலும், பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் பயத்தில் உறைந்து போய் கை கட்டிப் பார்த்திருந்தனர்.
இவ்வச்சுறுத்தல் காரணமாக வழக்குகளை ஒத்தி வைத்துவிட்டு நீதிவான் ஆசனத்தில் இருந்து செல்ல நீதிவான் முயன்ற போதே நான் தலையிட்டு, வழக்குகளை ஒத்தி வைக்க வேண்டாம் எனவும், ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் மன்றை கோரினேன். இதன்போதே என்னை 'பேடித்தனமான அரச சட்டவாதி' என அவர் திட்டினார் என பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்த போது, ஞானசார தேரர் ஹோமாகம நீதிவான் நீதிமன்றுக்குள் அத்துமீறியிருந்தார். இதன்போது நீதிமன்ற வளாகத்தில் வைத்து பிரசாத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனைவிட அன்றைய தினம் பெருந் தொகையான பிக்குகளுடன் ஞானசார தேரர் ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் உள் நுழைந்து நீதிவான் ரங்க திசாநாயக்கவை நோக்கி விரல் நீட்டி இராணுவத்தினரை பழி தீர்க்கும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தனது குரலை உயர்த்தி அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
இதனால் அன்றைய தினம் முழுதும் ஹோமாகம நீதிவான் நீதிமன்றின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து நீதிமன்றை அவமதித்தமை, அரச அதிகாரியின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை மற்றும் குறித்த வழக்கின் சாட்சியாளரான எக்னெலிகொடவின் மனைவிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவரை கைது செய்யுமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந் நிலையில் ஞானசார தேரர், 2016 ஜனவரி 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன் அவர் மீது குறித்த மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் தனித்தனியாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதில் நீதிமன்றை அவமதித்தமை தொடர்பிலான வழக்கு அப்போதைய ஹோமாகம நீதிவானும் தற்போது கொழும்பு மேலதிக நீதிவானுமாகிய ரங்க திசாநாயக்கவினால் விசாரணைக்காக மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டது.
இது தொடர்பிலான வழக்கின் சாட்சி விசாரணைகள் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய, ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதன்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரும் மன்றில் பிரசன்னமாகியிருந்தார். அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா ஆஜராகியிருந்ததுடன் சிரேஷ்ட பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ரொஹந்த அபேசூரியவின் கேள்விகளுக்கு பதிலளித்த வண்ணம் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீப பீரிஸ் சாட்சியம் வழங்கினார். இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஞானசார தேரரின் நடவடிக்கை தொடர்பில் நான் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்த நிலையில் சட்ட மா அதிபருக்கும் முறைப்பாடு அளித்திருந்தேன். உண்மையில் ஞானசார தேரர் குரலை உயர்த்தி நீதிவானுக்கு கட்டளை இடும் தொனியில் ' இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கறுப்பு, வெள்ளையர்களின் சட்டம். இதனூடாக இராணுவத்தினர் தண்டிக்கப்படுகின்றார்கள். இதனை நாம் பாராளுமன்றம் சென்றேனும் மாற்றுவோம் என கோஷமிட்டார். நீதிவான் ஞானசார தேரருக்கு விடயம் தொடர்பில் விளக்கமளித்த போதும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு தேரர் என்ற ரீதியில் மதிப்பளித்தே தான் பேசிக்கொண்டிருப்பதாக நீதிவான் கூறியபோதும் தொடர்ந்தும் ஞானசார தேரர் அச்சுறுத்தும் வண்ணம் பேசிக்கொண்டிருந்தார்.
அவர் நடந்து கொண்ட முறைமையானது வன்முறையை வெளிப்படுத்தியது. அவரது நடவடிக்கைகள் கடும் பயத்தை ஏற்படுத்தியது. ஞானசார தேரர் நீதிமன்றை அவமதிக்கும் வகையில் இவ்வாறு தொடர்ச்சியாக நடந்துகொண்ட போதும், அவரை கைது செய்வதற்கான போதுமான கால அவகாசம் இருந்த நிலையிலும், பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் பயத்தில் உறைந்து போய் கை கட்டி பார்த்திருந்தனர்.
இவ்வச்சுறுத்தல் காரணமாக வழக்குகளை ஒத்தி வைத்துவிட்டு நீதிவான் ஆசனத்தில் இருந்து செல்ல நீதிவான் முயன்றபோதே நான் தலையிட்டு, வழக்குகளை ஒத்தி வைக்க வேண்டாம் எனவும், ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் மன்றைக் கோரினேன். இதன்போதே என்னை 'பேடித்தனமான அரச சட்டவாதி' என அவர் திட்டினார் என சாட்சியம் வழங்கினார். இது தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
Post a Comment