Header Ads



திமிர் பிடித்த தமிழ் பையன்!

-Mano Ganesan-

2001ம் வருஷம். நான் ஒரு புது இளம் எம்பி. கட்சி ஆரம்பித்த புதிது. கொழும்பு மாநகரசபை தேர்தலில் எங்கள் கட்சி தனியாக போட்டியிட முடிவு செய்தது. அப்போது ஆட்சியில் இருந்த UNP கட்சியின் செயலாளர் என்னை அழைத்து, தனியாக போட்டி இடாதீர்கள் என கேட்டுக்கொண்டார். நாம் போட்டியிட்டால், கொழும்பில் ஐதேக தமிழ் வாக்கு சிதறுமாம்.

"சரி, ஐதேக பட்டியலில், எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு இரண்டு இடம் தாருங்கள்" என்றேன். "அதில் இடமில்லை. எல்லாம் நிரம்பிவிட்டன. எங்கள் கட்சி தமிழ் வேட்பாளர்கள் இருக்கின்றார்கள்.", என்றார்.

"என்ன செய்வது? எங்கள் கட்சி அரசியல் குழு முடிவு செய்து விட்டது. போட்டியிலிருந்து வாபஸ் வாங்குவது கஷ்டம். எங்கள் வேட்பாளர் பட்டியல்கூட தயார்", என்றேன்.

"உங்கள் கட்சி அரசியல் குழுவை கூட்டுங்கள். நான் அதில் வந்து பேசுகிறேன். வேண்டுமானால் போட்டியிட உள்ள உங்கள் வேட்பாளர்களுக்கு பணம் தரவும் தயார்", என்றார்.

(எனக்கு கோபம் வருகிறது) அவரது கண்களை நேராக பார்த்து, "சரி, உங்கள் கட்சி செயற்குழுவையும் கூட்டுங்கள். நானும் அங்கு வந்து பேசுகிறேன்", என்றேன்.

"திமிர் பிடித்த தமிழ் பையன்" (ஆங்கார தமில கொல்லா..!) என்று சொல்லி விட்டு கோபமாக ஐதேக செயலாளர் போய்விட்டார்.

நீண்ட நாட்களுக்கு பின், சமீபத்தில் அவரை சந்தித்தேன். "அதே திமிர் பிடித்த தமிழ் பையன்தான். ஆனால் அந்த திமிர்தான் உங்களை இவ்வளவு தூரம் உயர்த்தி இருக்கிறது, அமைச்சரே!" என்று அன்பாக என் தோளை தட்டி சொன்னார், 

அந்த முன்னாள் ஐதேக பொது செயலாளர். அவர் இன்று 28.07.2017 இறந்து போனோர். அவர் செனரத் கபுகொடுவ.

No comments

Powered by Blogger.